எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 நவம்பர், 2014

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்கந்தர் சஷ்டி. SKANDAR SASHTI RECIPES

1. ஓட்ஸ் லட்டு:-

தேவையானவை. :-

ஓட்ஸ் – 1 கப்
சன்ன வெள்ளை ரவை – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஜீனி – ½ கப்
பேரீச்சை – 2
முந்திரி – 8


செய்முறை:-
ஓட்ஸை வெறும் பானில் 5 நிமிடம் சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு நிமிடம் போட்டுப் பொடிக்கவும். வெள்ளை ரவையையும் லேசாக வாசம் வரும் பக்குவம் வெள்ளையாகவே வறுத்து இறக்கவும். ஜீனியைப் பொடித்து வைக்கவும். பேரீச்சையைப் பொடியாக அரிந்து வைக்கவும். முந்திரியை சிறுதுண்டுகளாக உடைத்து வைக்கவும்.


ஒரு பேசினில் ஓட்ஸ் மாவு, ரவை, பொடித்த ஜீனி, பேரீச்சை, முந்திரியைக் கலந்து வைத்து நெய்யைக் காய்ச்சி ஊற்றிப் பிடிக்கவும். பிடிக்க வராவிட்டால் லேசாகப் பால் தெளித்துப் பிடிக்கவும். 

2. பாப்கார்ன் பர்ஃபி:-

தேவையானவை:-
மக்காச் சோளம் – 1 கப்
வெல்லம் – 1 கப்
செய்முறை:-

கனமான குக்கர் அல்லது தோசைக்கல்லில் மக்காச்சோளத்தை லேசாக எண்ணெயில் பிசறிப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். குக்கரில் போட்டால் மேலே குக்கர் மூடியைத் திருப்பி வைக்கவேண்டும். தோசைக்கல்லில் போட்டால் கரண்டியை வைத்து இடைவெளி கொடுத்து அதன் மேல் தோசை மூடி வைக்கவும்.

3 நிமிடங்களில் சோளம் பொரிய ஆரம்பிக்கும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டுத் திறந்தால் சோளம் மலர்ந்து பூப் போல இருக்கும்.

இந்தப் பாப்கார்னில் மலர்ந்ததை மட்டும் எடுத்துக்கொள்ளவும். லேசாக இதை உரலில் இடித்துக்கொள்ளலாம். ரொம்பப் பொடியாகக் கூடாது. வெல்லத்தில் லேசாகத் தண்ணீர் விட்டு முத்துப் பாகு வைக்கவும். பாகைத் தட்டில் விட்டு தண்ணீர் தொட்டு உருட்டினால் முத்துப்போல உருட்ட வர வேண்டும். அதில் பாப்கார்னைப் போட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி பெரிய வில்லைகளாகப் போடவும். ஆறியதும் எடுக்க வரும். நிவேதனம் செய்யவும்.

3. கார்ன்ஃப்ளேக்ஸ் உருண்டை:-

தேவையானவை:-
கார்ன் ஃப்ளேக்ஸ் – 1 கப்
ஸ்ட்ராபெர்ரி பழம் – 4
மில்க் மெய்ட் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:-
கார்ன் ஃப்ளேக்ஸை லேசாக நொறுக்கிக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரியைக் காம்பு நீக்கித் துண்டுகளாக்கிச் சேர்க்கவும். அதில் மில்க் மெய்ட் ஊற்றிக் கலந்து உருண்டை பிடித்து நிவேதிக்கவும். இது சீக்கிரம் கரகரப்புப் போய் நமுத்துவிடும் என்பதால் அவ்வப்போது செய்து உடனே நிவேதனம் செய்து சாப்பிடலாம்.
4. பழ அப்பம்.:-

தேவையானவை :-
கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை – 1 டேபிள் ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் – 1
(விரும்பினால் ஒரு துண்டு மாம்பழம், ஒரு சுளை பலாப்பழம் ஒரு பேரீச்சை மூன்றையும் அரை வாழைப்பழத்தோடு நன்கு அரைத்துச் சேர்க்கலாம். )
ஜீனி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலப்பொடி – 1 சிட்டிகை.
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
ஒரு பேசினில் ரவை மைதா கோதுமையைக் கலந்து அதில் உப்பு, ஜீனி, ஏலப்பொடி போடவும். வாழைப்பழத்தை நன்கு சேர்த்துப் பிசைந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு லேசாகத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். 5 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெயை சுடவைத்து மாவைக் கரண்டியால் நன்கு கலக்கி அடித்து ஊற்றி திருப்பி விட்டு எடுக்கவும். சரியான பக்குவம் இருந்தால் ஓரங்கள் நெளி நெளியாக அழகாக உப்பி வரும். இதில் பத்து அப்பங்கள் வரும். நிவேதனம் செய்யவும்.


5. கோதுமை ப்ரெட் கட்லெட்:-
தேவையானவை:-
கோதுமை ப்ரெட் ஸ்லைசஸ் - 4
அவித்த உருளைக்கிழங்கு - 1
காரட் - 1 சின்னது துருவவும்.
பெ. வெங்காயம் - பொடியாக அரிந்தது. 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 1 பொடியாக அரியவும்.
கொத்துமல்லித்தழை - 1 கைப்பிடி பொடியாக அரியவும்.
கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்.
ரஸ்க் தூள் - 1 கப்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 சிட்டிகை.
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 20 மிலி
செய்முறை:-
அவித்த உருளையுடன் ப்ரெட், துருவிய காரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, கரம்மசாலா, மிளகாய்த்தூள், உப்பு வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கட்லெட் வடிவத்தில் உருட்டித் தட்டி வைக்கவும்.
மைதாவில் தண்ணீர் ஊற்றி உப்பும் மிளகாய்த்தூளும் போட்டுக் கரைத்து வைக்கவும்.
கட்லெட்டுகளை மைதாவில் நனைத்து ரஸ்கில் புரட்டி நான்ஸ்டிக் பானில் எண்ணெய் தெளித்து எல்லாப் பக்கமும் நன்கு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

6. கேலா டிக்கி:-
தேவையானவை:-
நன்கு முற்றிய வாழைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
உப்பு - 1 சிட்டிகை
கொத்துமல்லித்தழை - சிறிது.
பச்சைமிளகாய் - 2 பொடியாக அரியவும்.
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
வாழைக்காய்களை வேகவைத்துத் தோலுரித்து மசிக்கவும். அதில் வெங்காயம், உப்பு, கொத்துமல்லித்தழை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகப் பிசைந்து உருட்டவும். லேசாக பாதுஷா போல தட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும்.

7. இளநீர்ப் பாயாசம்:--
தேவையானவை:-
இளநீர் வழுக்கை - 4 இளநீருக்கானது.
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10
பாதாம் - 10
பச்சரிசி/பாசுமதி - 10 கி
சீனி - 100 கி
வனிலா எசன்ஸ் - 4 சொட்டு.
செய்முறை:-
பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். அரிசியையும் முந்திரியையும் தண்ணீரில் ஊறப்போடவும். மூன்றையும் வெண்ணெய் போல் அரைத்துக் காய்ச்சிய பாலில் கலக்கவும். லேசாக சூடுபடுத்தி ஜீனியையும் சேர்க்கவும். ஜீனி கரைந்ததும் இறக்கி ஆறவிடவும்.நன்கு ஆறியதும் தேங்காய் வழுக்கைகளை ஸ்பூன் அல்லது கரண்டி அல்லது மத்தால் நன்கு மசித்துப் பாலில் சேர்க்கவும். அல்லது மிக்ஸியில் வைப்பரில் லேசாக அடிக்கலாம். வனிலா எசன்ஸ் கலந்து உபயோகப்படுத்தவும். 


8. போல் ரொட்டி.
தேவையானவை:-
மைதா - 2 கப்
தேங்காய் - 1 கப் துருவியது.
தேங்காய்ப் பால் - 1/2 கப்
பெரிய வெங்காயம் -  1 பொடியாக அரியவும்
பச்சைமிளகாய் - 1 பொடியாக அரியவும்
மிளகாய்த்தூள் - கரகரப்பாகப் பொடித்தது - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 டீஸ்பூன் பொடியாக அரியவும்.
உப்பு - 1/2 டீஸ்பூன்.
தேங்காய் எண்ணெய் - 100 மிலி
செய்முறை:-
ஒரு பேசினில் மைதாவைப் போட்டு அதில் துருவிய தேங்காய், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், கருவேப்பிலை , உப்பு போட்டு நன்கு கலந்து தேங்காய்ப்பால் ஊற்றிப் பிசையவும். அதில் தேங்காய் எண்ணெயைக் கடைசியாக பாதி சேர்த்து நன்கு மென்மையாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்
அதன் பின் மாவை உருண்டைகள் செய்து கையாலேயே ரொட்டிகள் தட்டவும். இருகைகளாலும் நன்கு சீராகத் தட்டி நான் ஸ்டிக் தவாவில் மிதமான தீயில் போட்டு எண்ணெய் தெளித்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை திருப்பித் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். தேங்காய் சம்பலுடன் ( சட்னி) பரிமாறவும் .
வெறும் மாவு, உப்பு, தேங்காய்த்துருவல், எண்ணெய் சேர்த்தும் இதை செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...