எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஏப்ரல், 2015

ராமநவமி ரெசிப்பீஸ். RAMANAVAMI RECIPES



1.துளசி ரொட்டி
2.தூதுவளை அடை
3.வல்லாரை வடை
4. முடக்கத்தான் ஊத்தப்பம்.
5.முள்ளு முருங்கை தோசை.
6.புதினா பக்கோடா
7.மேத்தி பரோட்டா.
8. தேன் நெல்லிக்கனி பாயாசம்
9.பீட்ரூட் பானகம்
10.கருவேப்பிலை நீர் மோர்
11. காரட் குடைமிளகாய் மல்லி கோசம்பரி.
1.துளசி ரொட்டி :-

தேவையானவை :-
புழுங்கல் அரிசி – 2 கப்
பச்சரிசி – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
துளசி – ஆய்ந்தது ½ கப்
சின்ன வெங்காயம் – 6 பொடியாக நறுக்கவும்.
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 20 மிலி.

செய்முறை:-
பச்சரிசி புழுங்கல் அரிசி இரண்டையும் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். கெட்டியாக அரைத்து ஒரு துணியில் போட்டு வைக்கவும். துளசியைக் கழுவி கெட்டியாக அரைக்கவும். மாவை ஒரு பேசினில் போட்டு அரைத்த துளசி, சீரகம் ( கையால் கசக்கிப் போடவும். ). பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து எண்ணெய் தடவிய ஷீட்டில் ரொட்டிகளாக தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.

2. தூதுவளை அடை :-

தேவையானவை:-
பச்சரிசி – ½ கப்
புழுங்கல் அரிசி- ½ கப்
துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கைப்பிடி.
தூதுவளைக் கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி , காரட் – துருவியது – தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
வரமிளகாய் – 4
சோம்பு – ½ டீஸ்பூன் (அல்லது ) பெருங்காயம் – 1 துண்டு
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 20 மிலி.

செய்முறை:-
பச்சரிசி புழுங்கல் அரிசியை உளுந்தம் பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். தூதுவளையை ஆய்ந்து கீரைகளை மட்டும் எடுக்கவும்.

இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் முதலில் மிளகாய் சோம்பு உப்பு போட்டு அரைத்து அதில் அரிசி உளுந்தைப் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்து பருப்பு வகைகளையும் பெருபெருவென்று அரைத்து எடுக்கவும். கடைசியில் தூதுவளையைப் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து மாவில் சேர்த்து உப்பு மஞ்சள் பொடி போடவும்.

இஞ்சி காரட் துருவல், தேங்காய் துருவல், பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும். அதன் பின் தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

3. வல்லாரை வடை :-

தேவையானவை :-
வல்லாரை – 1 சிறுகட்டு
துவரம் பருப்பு – ¼ கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
கடலைப்பருப்பு – ¼ கப்
சோம்பு – ¼ டீஸ்பூன்
வெங்காயம் – 1 பொடியாக அரியவும்
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
வரமிளகாய் – 1
இஞ்சி – 1 இஞ்ச்
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

வல்லாரைக் கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நீரை வடித்து வைக்கவும். மிக்ஸியில் பச்சைமிளகாய், வரமிளகாய் சோம்பு, உப்பு, இஞ்சி போட்டு அரைத்து அதில் பருப்புகளை நீர் இல்லாமல் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வல்லாரையை அதில் போட்டுப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து வடைகளாக ( ஆமை வடை போல் ) சுட்டு எடுக்கவும். இஞ்சிச் சட்னியுடன் பரிமாறவும்.

4. முடக்கத்தான் ஊத்தப்பம் :-

தேவையானவை :-
முடக்கத்தான் – 1 கட்டு
புழுங்கல் அரிசி – 2 கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – ½ டீஸ்பூன்
வெங்காயம் – 1 பொடியாக அரியவும்.
எண்ணெய் – 10 மிலி

செய்முறை:-
முடக்கத்தான் இலைகளை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய் புழுங்கல் அரிசியை நைசாக அரைக்கவும். முடக்கத்தானையும் அரைத்துச் சேர்க்கவும். வெங்காயத்தையும் உப்பையும் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஊத்தப்பங்களாக வார்க்கவும். மூடி போட்டு வேகவைத்து திருப்பி விட்டு சில துளி எண்ணெய் தெளித்து வெந்ததும் எடுக்கவும். பூண்டுச் சட்னியுடன் பரிமாறவும்.

5.முள்ளு முருங்கை தோசை.

தேவையானவை :-
முள்ளு முருங்கை இலை – 15
இட்லி அரிசி – 1 கப்
சீரகம் – ¼ டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6 பொடியாக அரியவும்.
உப்பு – ¼ டீஸ்பூன்
எண்ணெய் – 10 மிலி

செய்முறை:-

முள்ளு முருங்கை இலையைக் கழுவி வைக்கவும். இட்லி அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் அரிசி சீரகம், முள்ளு முருங்கை இலை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தைக் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து கல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வார்க்கவும். வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.


6.புதினா பக்கோடா:-

தேவையானவை :-

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
புதினா – ½ கப்
சோம்பு – ¼ டீஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – ¼ டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:-

புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு அரிசி மாவு உப்பு சோம்பு மிளகாய்த் தூளை நன்கு கலந்து வெண்ணெயும் புதினாவும் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து பிரட்டினாற்போலப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக வேக வைக்கவும். மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.


7.மேத்தி பராத்தா. :-

தேவையானவை :-
கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக்கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1 சின்னது பொடிப்பொடியாக நறுக்கவும்.
மிளகாய்ப் பொடி – ¼ டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
எண்ணெய்/நெய் – 10 மிலி

செய்முறை :-
வெந்தயக் கீரையை சுத்தம் செய்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கி கோதுமை மாவில் போடவும். பொடியாக அரிந்த வெங்காயம் மிளகாய்த்தூள் உப்பு வெண்ணெய் போட்டுக் கலந்து விட்டு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். கடைசியில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

கனமான சப்பாத்திகளாகப் போட்டு சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு நிதானமாய தீயில் நன்கு வெந்து வாசனை வந்ததும் எடுத்து தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.


8. தேன் நெல்லிக்கனி பாயாசம்
தேவையானவை :-
தேனில் ஊறிய நெல்லிக்காய் – 6
பால் – 4 கப்
முந்திரி – 6
பாதாம் – 10
சீனி – ¼ கப்
வெனிலா எசன்ஸ் – சில துளி

செய்முறை:-

பாதாம்முந்திரியை வெந்நீரில் ஊறவைத்து பாதாமின் தோல் நீக்கி சிறிது பால் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மிச்ச பாலை நான்கில் மூன்று பாகமாக சுண்டும்படி காய்ச்சவும். பாதாம் முந்திரி விழுதையும் சீனியையும் சேர்க்கவும். நன்கு கரைந்து வாசனை வரும் பக்குவத்தில் இறக்கி வைக்கவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். தேனில் ஊறிய நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி டூட்டி ஃப்ரூட்டி போல் துண்டுகள் செய்து பாயாசத்தில் போடவும். மிகவும் ருசியான பாயாசம் இது.


9.பீட்ரூட் பானகம்

தேவையானவை :-
பீட்ரூட் – 1 சின்னம்
வெல்லம் – 2 துண்டு
தண்ணீர் – 5 கப்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
சுக்குப் பொடி – 1 சிட்டிகை
புளி – 1 சுளை அல்லது
எலுமிச்சை சாறு – 10 சொட்டு
உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:-
பீட்ரூட்டைத் தோல்சீவிக் கழுவி ஒரு சுளை புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டவும். வெல்லத்தை நைத்துத் தண்ணீரில் போட்டுக் கரைத்து அதையும் வடிகட்டி பீட்ரூட் தண்ணீருடன் சேர்க்கவும். புளிபோடாவிட்டால் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் சுக்குப் பொடி, ஏலப்பொடி உப்பு சேர்த்துக் கலந்து நிவேதிக்கவும்.

10.கருவேப்பிலை நீர் மோர்

தேவையானவை :-
கொழுந்து கருவேப்பிலை – 1 கைப்பிடி
சீரகம் – 1 சிட்டிகை
பச்சை மிளகாய் – 1 ( விரும்பினால் )
தயிர் – 2 கப்
தண்ணீர் – 4 கப்
உப்பு – ½ டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை

செய்முறை:-

தயிரைக் கடைந்து பெருங்காயப் பொடி போட்டு வைக்கவும். கொழுந்து கருவேப்பிலையைக் கழுவி சீரகம் பச்சை மிளகாய் உப்புடன் அரைத்து தண்ணீர் சேர்த்து வடிகட்டி கடைந்த தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும். நிவேதிக்கவும்.

11. காரட் குடைமிளகாய் மல்லி  கோசம்பரி:-

தேவையானவை :-
பாசிப்பருப்பு – 1 கப்
காரட் – 1 டேபிள் ஸ்பூன் துருவியது
குடைமிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது
கொத்துமல்லி – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது
தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 மூடி
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பருப்பைக் களைந்து 4 மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்து வைக்கவும். அதில் உப்பு காரட் குடைமிளகாய் கொத்துமல்லி தேங்காய் எலுமிச்சை சாறு கலந்து எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து நிவேதிக்கவும்.

டிஸ்கி :- இந்த நிவேதனங்கள் மார்ச் 26 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...