எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 ஜூன், 2025

பருப்புப் பொங்கல்

பருப்புப் பொங்கல்



தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1 கப், தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு, சீரகம், மிளகு  தலா 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 20, இஞ்சி – 2 இஞ்ச் துண்டு, பச்சைமிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சீரகம் போட்டு  நான்கு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து உப்புப் போட்டு மசிக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்துக் உளுந்து, மிளகு சீரகத்தைத் தாளித்து முந்திரிப் பருப்பையும், கருவேப்பிலையையும் போட்டு பெருங்காயத்தூள் தூவிப் பொரிந்ததும் பருப்புப் பொங்கலில் கொட்டிக் கிளறிவிட்டு நெய்யைக் காய்ச்சி மேலே ஊற்றி நிவேதிக்கவும்.

வியாழன், 26 ஜூன், 2025

கீரைக் கூட்டாஞ்சோறு.

கீரைக் கூட்டாஞ்சோறு.



தேவையானவை :-  அரிசி – 1 கப், துவரம் பருப்பு – அரை கப், முளைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை – தலா 1 கைப்பிடி, காய்கறிக் கலவை – 1 கப், ( வாழை, கத்திரி, பூசணி, சேனைக்கிழங்கு , அவரைக்காய் ). சின்ன வெங்காயம் – 5, தக்காளி – 1, புளி – நெல்லி அளவு, சாம்பார் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்க :- வரமிளகாய் – 4, மல்லி – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு  - அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கீரைகளை ஆய்ந்து கழுவி வைக்கவும். மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை வறுத்துப் பொடிக்கவும். உப்பு புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி அரிசி பருப்பைக் களைந்து வேகப்போடவும். பாதி வெந்ததும் துண்டாக்கிய காய்கறிக் கலவையையும் மஞ்சள் தூளையும் போட்டு வேகவைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றிப் பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளியை வதக்கி சாம்பார்பொடி, புளித்தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இதை அரிசி காய்கறிக் கலவையில் சேர்க்கவும். கீரைகளையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து குழைய வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து வறுத்துப் பொடித்த மசாலாப் பொடி சேர்த்து இறக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

திங்கள், 23 ஜூன், 2025

காய்கறிக் கதம்பச் சாதம்

காய்கறிக் கதம்பச் சாதம்



தேவையானவை :- அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 3 கப், ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, காரட், பீட்ரூட், பீன்ஸ் , பட்டாணி, பட்டர் பீன்ஸ் ). வெங்காயம் – 1 பொடியாக அரியவும், தக்காளி – 1 பொடியாக அரியவும். அரைக்க :- பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன். மல்லித்தழை – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- அரிசியைக் களைந்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் தக்காளியை வதக்கவும். இதில் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி அதன் பின் காய்கறிக் கலவையைச் சேர்த்து வதக்கவும். அரிசியையும் போட்டு உப்பைச் சேர்த்துத் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியபின் திறந்து மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

வெள்ளி, 20 ஜூன், 2025

பச்சைத் தேன்குழல்

பச்சைத் தேன்குழல்



தேவையானவை :- பச்சரிசி - 2 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - அரை கப், உப்பு – அரை   டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும். எண்ணெயைக் காயவைத்து  மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து உடனே திருப்பிவிட்டு வெண்ணிறமாக எடுத்துப் பரிமாறவும்.

திங்கள், 16 ஜூன், 2025

பாசிப்பயறுக் கிச்சடி

பாசிப்பயறுக் கிச்சடி



தேவையானவை:- பச்சரிசி – 1 கப், உடைத்த பாசிப்பயறு – ½ கப், தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்., ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய்ப் பொடி – தேவைப்பட்டால் ), உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்., உப்பு – 1 டீஸ்பூன். தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும். ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போட்டு நிவேதனம் செய்யவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...