எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2016

ஹனுமத் ஜெயந்தி பொங்கல் கனுப்பொங்கல் ரெசிப்பீஸ் :- HANUMATH JEYANTHI, PONGAL RECIPES,



ஹனுமத் ஜெயந்தி பொங்கல் கனுப்பொங்கல் ரெசிப்பீஸ் :-

1.குதிரை வாலி சர்க்கரைப் பொங்கல்
2.காரட் பீட்ரூட் கற்கண்டுப் பொங்கல்
3.பாசிப்பயறு பச்சரிசி காய்கறிப் பொங்கல்
4.பொங்கல் குழம்பு
5.சாமை அரிசி பிசிபேளாபாத்.
6.தக்காளி புலவு சாதம்
7.தினை பயறு தேங்காய் சாதம்.
8.மிளகு தட்டை
9.முப்பருப்பு வடை

1.குதிரை வாலி சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை :- குதிரை வாலி அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், வெல்லம் – ஒரு கப், பால் – சிறிது, பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை, கிராம்பு – 1 நெய் –  2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை :-

குதிரை வாலி அரிசியுடன் பாசிப்பருப்பை சேர்த்துக் களைந்து கல்லரித்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரை வைத்து சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கவும். நன்கு மசித்து வெல்லத்தை சேர்க்கவும். அடுப்பில் வைத்துக் கிளறி வெல்லம் கரைந்ததும் இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போட்டு ஏலப்பொடி பொடித்த கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். நிவேதிக்கவும்.


2.காரட் பீட்ரூட் கற்கண்டுப் பொங்கல்

தேவையானவை :- காரட் – 1 சின்னம், பீட்ரூட் – 1 சின்னம், பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு + கடலைப்பருப்பு – தலா கால் கப், கல்கண்டு – பொடித்தது ஒரு கப், வனிலா எஸன்ஸ் – சில துளிகள், பால் – 4 கப். நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10,

செய்முறை :-

பச்சரிசியைக் களைந்து பாசிப்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து இரண்டு கப் பால் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் சன்னமாகத் துருவிய காரட் பீட்ருட்டை வதக்கவும். நன்கு பச்சை வாசனை போக வதங்கியதும் 2 கப் பால் ஊற்றி குக்கரில் இருக்கும் சாதத்தில் போட்டு திரும்பவும் இரண்டு விசில் வேகவைத்து எடுத்து நன்கு மசிக்கவும். கற்கண்டைப் பொடித்துச் சேர்க்கவும். நன்கு கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வனிலா எஸன்ஸையும் வறுத்த முந்திரி கிஸ்மிஸையும் சேர்த்து இன்னும் சிறிது நெய் விட்டு நிவேதிக்கவும்.


3.பச்சரிசி காய்கறிப் பொங்கல்

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், உருளைக்கிழங்கு – 1, பட்டாணி – 1 கப், தக்காளி – 1, பெரியவெங்காயம் – 1 ,சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, முந்திரி – 10, உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன். நெய் – 1 டேபிள் ஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- பச்சரிசி பாசிப்பருப்பைக் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றவும். இதில் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் தக்காளியை சின்னத் துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும் பட்டாணியையும் போடவும். பச்சைமிளகாயைக் கீறிப் போடவும். குக்கரில் இரண்டு விசில் வேகவைத்து இறக்கவும். உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். நெய்யில் உளுந்தம் பருப்பு, மிளகு சீரகம் , முந்திரி, கருவேப்பிலை வறுத்துப் பொங்கலில் கொட்டிக் கிளறி இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து உபயோகிக்கவும்.

4.பொங்கல் குழம்பு. :-

தேவையாவை :-

பரங்கிக்காய் – 1 துண்டு.சின்னம்.,கத்திரிக்காய் – 2,வாழைக்காய் சின்னம் – 1 ,அவரைக்காய் – 10. தட்டைப் பயித்தங்காய் – 15, சிறு கிழங்கு – 10 ( வேகவைத்து தோலுரித்துத் துண்டுகளாக்கவும். ). சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 2. சின்ன வெங்காயம் – 10. வெள்ளைப் பூண்டு – 8
தக்காளி – 2. வேகவைத்த துவரம் பருப்பு -  1 கப். மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன். புளி – 6 சுளை. உப்பு – 2 டீஸ்பூன். வெல்லம் - - சிறுதுண்டு.
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். கடுகு – ½ டீஸ்பூன். பெருங்காயம் – 1 சிறுதுண்டு. உளுந்து – ½ டீஸ்பூன். சீரகம் – ½ டீஸ்பூன். வெந்தயம் – ½ டீஸ்பூன். கருவேப்பிலை – 2 இணுக்கு. சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன் (அல்லது ). வரமிளகாய் – 6. மல்லி – 2 டேபிள் ஸ்பூன். கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன். சீரகம் – 1/2 டீஸ்பூன். மிளகு – 10

இவற்றை அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து ஒரு சின்ன வெங்காயம் ஒர் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.

செய்முறை:-
ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம், சீரகம் வெந்தயம் கருவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்து போடவும். பரங்கிக்காய், கத்திரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், தட்டைப்பயித்தங்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு இஞ்ச் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். வதக்கிய வெங்காயம் பூண்டு தக்காளியுடன் காய்கறிகளைச் சேர்க்கவும். 2 நிமிடம் நன்கு வதக்கவும்.

மஞ்சள் பொடி, சாம்பார் பொடி ( அல்லது ) வறுத்து அரைத்த மசாலாவைப் போட்டு உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். சிறு கிழங்கைச் சேர்க்கவும். பருப்பையும் கரைத்து ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும்.சிம்மில் வைப்பதானால் தணலிலேயே பத்து நிமிடம் வைத்து காய்கறிகள் மென்மையாக வெந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி வெள்ளைப் பொங்கலோடு பரிமாறவும். சிறிது வெல்லம் தட்டிப் போட்டு இறக்கினால் குழம்பின் சுவை கூடும்.

5.சாமை அரிசி பிசிபேளாபாத்.

தேவையானவை :-

சாமை அரிசி – 1 கப், துவரம் பருப்பு – கால் கப், காய்கறிக் கலவை – முருங்கை, கத்திரி, காரட் , உருளை, பட்டாணி – 1 கப்., சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1 . உப்பு – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு. வறுத்துப் பொடிக்க – வரமிளகாய் – 6, மல்லி – ஒரு கைப்பிடி, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை மூடி. கிராம்பு – 1 தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, பெருங்காயம் – 1 சிட்டிகை. எண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:-

சாமை அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நாலு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். துவரம் பருப்பையும் தனியாக வேகவைத்துக் கொள்ளவும். உப்பு புளியை ஊறவைக்கவும். மிளகாய் மல்லி தேங்காய் வெந்தயம் கிராம்பு கடலைப்பருப்பை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். காய்களை ஒரு இஞ்ச் துண்டாக வெட்டி வேகவிடவும். அதில் வெங்காயம் தக்காளியையும் போட்டு வேகவைக்கவும். நன்கு வெந்ததும் உப்பு புளியைக் கரைத்து ஊற்றி வறுத்த பொடியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் போது துவரம்பருப்பை மசித்துச் சேர்க்கவும். இறக்கி சாத்தை மசித்து அதில் கலந்து எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். நெய்யைச் சேர்த்து நிவேதிக்கவும். அரிசி அப்பளம் கறிவடகத்தோடு பரிமாறவும்.

6.தக்காளி புலவு சாதம்:-

தேவையானவை :- சீரகசம்பா அரிசி – 1 கப், தக்காளி – 6, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, புதினா கொத்துமல்லி – ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் – 1, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – முக்கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2.

செய்முறை;:- சீரகச் சம்பா அரிசியைக் களைந்து ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து வைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புதினா கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை போட்டுத் தாளித்து பெரிய வெங்காயத்தை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி பொடியாக அரிந்த தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். கீறிய பச்சைமிளகாயைப் போட்டு மிளகாய்த்தூளையும் உப்பையும் சேர்க்கவும். இதில் வறுத்த சீரகச் சம்பா அரிசி, பொடியாக அரிந்த புதினா கொத்துமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். சிப்ஸ்,தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.


7.தினை பயறு தேங்காய் சாதம்.

தேவையானவை :- தினையரிசி – 1 கப், பயறு வகைகள் – கால் கப் ( தட்டைப் பயறு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை , மொச்சை, கொள்ளு ) தேங்காய் – 1 மூடி திருகியது. முந்திரிப் பருப்பு – 10, கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன் ,சீரகம் – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :-

தினையரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். முதல்நாளே வறுத்து ஊறவைத்த பயறு வகைகளையும் தினையரிசியையும் குக்கரில்போட்டு இரண்டரை கப்தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளூந்து, சீரகம், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய் கருவேப்பிலை தாளித்து உப்பு சேர்த்துத் நெய்யையும் ஊற்றித் தேங்காயையும் சேர்த்துப் புரட்டவும். இந்தக் கலவையில் உதிர்த்த தினையரிசி பயறுக் கலவையைப் போட்டு நன்கு கலந்து பத்துநிமிடம் மூடிவைத்து நிவேதிக்கவும். நார்த்தங்காய் வெல்லப் பச்சடியோடு பரிமாறவும்.  


8.மிளகு தட்டை

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், பொட்டுக்கடலை – அரை கப், மிளகு – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – சிறிது. உப்பு – அரை டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் , எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து அரைத்துச் சலிக்கவும். பொட்டுக் கடலையைப் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து உப்பு வெண்ணெய் போடவும். மிளகையும் கருவேப்பிலையையும் லேசாக வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து மாவில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து தட்டைகளாக ப்ளாஸ்டிக் ஷீட்டில் தட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும்.

9.முப்பருப்பு வடை:-

தேவையானவை :- கடலைப் பருப்பு – அரை கப், பாசிப்பருப்பு – கால் கப், துவரம் பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 1, வரமிளகாய் – 1, பெருங்காயம் – சிறுதுண்டு, இஞ்சி – சிறுதுண்டு, கருவேப்பிலை கொத்துமல்லி – 1 கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை – மூன்று பருப்புகளையும் ஒன்றாகப் போட்டுக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு பச்சைமிளகாய், வரமிளகாய் பெருங்காயம் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு போட்டு பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்துமல்லி சேர்க்கவும். எண்ணெயைக் காயவைத்து வடைகளாகத் தட்டிப் பொரித்து நிவேதிக்கவும்.  

டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் 14.1.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...