எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KRISHNA JAYANTHI RECIPES.



கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

சீடைக் கொழுக்கட்டை
வெல்லக் குழிப்பணியாரம்
அவல் காரட் கேசரி
ஸ்டஃப்டு ட்ரை ஜாமூன்
பேபிகார்ன் ஃப்ரிட்டர்ஸ்
பனீர் பகோடா.
மூரி
பலாக்காய் சொதி
பீட்ரூட் கோளா
கவுனியரிசிப் பாயாசம்

1.சீடைக் கொழுக்கட்டை

தேவையானவை:-

அரிசி மாவு – 2 கப், தேங்காய்த்துருவல் – கால் கப், சீனி – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன்.


செய்முறை:-

அரிசி மாவில் உப்பு சீனி சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கப் வெந்நீரைக் கொதிக்கவைத்து ஊற்றி கரண்டிக்காம்பால் கலக்கி ஆறியதும் தேவையான தண்ணீர் தொட்டு நன்கு பிசையவும். சீடைக்காய்கள் போல உருட்டி ஒரு தட்டில் போடவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும்போது உருட்டிய சீடைக் கொழுக்கட்டைகளை ஐந்தாறாக எடுத்துப் போடவும். சிலமுறை இவ்வாறு போட்டதும் கொதித்து வெந்து மேலே வரும். அவற்றைக் காய்கொட்டும் வடிகட்டியில் வடிகட்டி இன்னொரு தட்டில் போடவும். மிச்ச சீடைக்காய்களையும் இவ்வாறு வேகவைத்து வடிகட்டி எடுத்து லேசான சூட்டோடு நெய்யும் தேங்காயும் போட்டுப் புரட்டி நிவேதிக்கவும்.


2.வெல்லக் குழிப்பணியாரம்

தேவையானவை :-

பச்சரிசி – 1 கப், புழுங்கல் அரிசி – 1 கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – 2 டீஸ்பூன். வெல்லம் – 250 கிராம். கருப்பட்டி , சர்க்கரை – சிறிது. உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்/நெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை.:-

பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து வெந்தயத்தை ஒன்றாகப் போட்டு நன்கு களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து கெட்டியாக வெண்ணெய் போல் அரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

வெல்லம், கருப்பட்டி, சர்க்கரை மூன்றையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டுப் பாகு வைக்கவும். மூன்றும் கரைந்ததும் மாவில் வடிகட்டி ஊற்றி நன்கு கலக்கவும். 

குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய்/ நெய் ஊற்றி குழிப்பணியாரங்களாகச் சுட்டு எடுக்கவும் நிவேதிக்கவும்.

3.அவல் காரட் கேசரி

தேவையானவை :-

ரோஸ் அவல் – 1 கப், காரட் – 1 துருவவும். பால் – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 8, கிஸ்மிஸ் - , ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:-

ரோஸ் அவலை பானில் சிறிது சிறிதாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் காரட்டை வதக்கி ரோஸ் அவல் பொடியையும் போட்டு புரட்டவும். ஒரு கப் பால் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து நிவேதிக்கவும்.

4. ஸ்டஃப்டு ட்ரை ஜாமூன்

தேவையானவை :-

பனீர் – ஒரு பாக்கெட் ( 200 கி) , பால் பவுடர் – 20 கிராம். சீனி – 500 கிராம். ஸ்டஃபிங் செய்ய :- முந்திரி, பாதாம் பிஸ்தா – தலா 6. ஏலக்காய் – 6. குங்குமப்பூ – 2 சிட்டிகை, சர்க்கரை – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

பனீரை உதிர்த்து பால் பவுடர் சேர்த்து நன்கு மென்மையாகும்வரை பிசையவும். முந்திரி பாதாம் பிஸ்தாவில் ஓடு தோல் எடுத்து தோலுரித்த ஏலவிதைகளுடன் போட்டு ஒரு சிட்டிகை குங்குமப்பூ சர்க்கரை சேர்த்து பொடித்து வைக்கவும்.

சர்க்கரையில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி மென் பாகு வைக்கவும். ( கம்பிப் பாகுக்கு முந்தைய பதம் ). பனீர் பால்பவுடர் கலவையை நெல்லி அளவு எடுத்து கிண்ணம் போல் உருட்டி உள்ளே ஸ்டஃபிங்கில் சிறிது வைக்கவும். நன்கு உருட்டி எண்ணெயை மிதமாகக் காயவைத்துப் பொரிக்கவும்.

உடன் பாகில் போட்டு நன்கு ஊறியதும் தட்டுகளில் அடுக்கி ஒரு சிட்டிகை குங்குமப்பூவைத் தூவி நிவேதிக்கவும்.

5.பேபிகார்ன் ஃப்ரிட்டர்ஸ்

தேவையானவை :-
பேபிகார்ன் – 1 பாக்கெட். கடலை மாவு – அரைகப், அரிசி மாவு, மைதா, கார்ன்ஃப்ளோர்  - தலா 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-

பேபிகார்னை குறுக்கில் வெட்டி நீண்ட துண்டுகளாகச் செய்யவும். வெந்நீரில் 3 நிமிடம் வேகவைத்து வடிகட்டி வைக்கவும். கடலைமாவில் அரிசிமாவு, மைதா, கார்ன்ஃப்ளோர், வரமிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பேபிகார்ன் துண்டுகளை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும். நிவேதிக்கவும்.

6.பனீர் பகோடா.

தேவையானவை :-

பால் – 2 லிட்டர், மைதா, கார்ன்ஃப்ளோர் – தலா 1 கப், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3. வரமிளகாய் சோம்புப் பொடி – அரை டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு. எலுமிச்சை – 1 மூடி.

செய்முறை:-

பாலைக் காயவைத்து நன்கு கொதிக்கும்போது எலுமிச்சையை விதையில்லாமல் பிழியவும். பனீர் திரண்டு வந்ததும் ஒரு காட்டன் துணியில் கட்டி தண்ணீரைப் பிழியவும். அதில் கார்ன்ஃப்ளோர், மைதா, பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு, வரமிளகாய் சோம்புப் பொடி உப்பையும் சேர்த்து நன்கு பிசையவும். எண்ணெயைக் காயவைத்து பகோடாக்களாக உதிர்த்துப் பொரித்து நிவேதிக்கவும்.

7.மூரி :-
தேவையானவை :-
பொரி – 2 கப், ஓமப்பொடி – அரை கப், வேர்க்கடலை – கால் கப், அவித்த உருளைக்கிழங்கு – 1, பெரியவெங்காயம் - 1 , தக்காளி -1, சின்ன வெள்ளரிப்பிஞ்சு – 1, பச்சைமிளகாய் – 1, எலுமிச்சை – 1 மூடி, கொத்துமல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கடுகு /தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சாட் மசாலா – 1 சிட்டிகை.

செய்முறை:-

பொரி ஓமப்பொடி வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு பௌலில் போடவும். அவித்த உருளைக்கிழங்கை தோலுரித்து லேசாக மசித்து வைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளி வெள்ளரிப் பிஞ்சு பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை ஒரு பானில் காயவைத்து அடுப்பை அணைக்கவும். எலுமிச்சையை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். உருளை தக்காளி வெள்ளரிப்பிஞ்சு பச்சைமிளகாய் எலுமிச்சை சாறு உப்பு , சாட் மசாலா கொத்துமல்லித்தழை ஆகியவற்றை பொரி ஓமப்பொடி வேர்க்கடலை மிக்ஸரில் போட்டு காய்ச்சி ஆறிய எண்ணெயை ஊற்றி நன்கு பிசறி உடனே பரிமாறவும்.


8.பலாக்காய் சொதி

தேவையானவை :-

பலாக்கொட்டை – சிறிது ( சிறிய பலாக்காய் ), பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, அரைக்க :- பச்சைமிளகாய் – 8, மல்லி – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 1 மூடி, சோம்பு – 2 டீஸ்பூன், சீரகம், - அரை டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்னவெங்காயம் – 2 தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை சோம்பு, கிராம்பு தலா – 2. உப்பு – 1 டீஸ்பூன், கருவேப்பிலை கொத்துமல்லி – சிறிது.

செய்முறை:-

பலாக்கொட்டையை நான்காக வகிர்ந்து ப்ளாச்சு போட்டு ( குறுக்கில் ஸ்லைசாக வெட்டி ) நடுத்தண்டை எடுத்து அதை இரு துண்டங்களாக்கவும்.  குக்கரில் தேவையான நீர் சேர்த்து 3, 4 விசில் வரை வைத்து இறக்கவும். தண்ணீரை வடிய வைத்து காய்களை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை பூண்டு வெங்காயம் தேங்காய் தவிர மிச்சத்தை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வெதுப்பி சின்னவெங்காயம் பூண்டு சேர்த்து அரைக்கவும். தேங்காயைத் தனியாக விழுதாக அரைக்கவும்.

எண்ணெயில் பட்டை கிராம்பு சோம்பு தாளித்து வெங்காயம் தக்காளியை வதக்கி வெந்த பலாக்காயைப் போடவும். அதில் அரைத்த பச்சைமிளகாய் மசாலாவைப் போட்டு நன்கு திறக்கவும். உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு கருவேப்பிலை கொத்துமல்லி போட்டு ஒரு கொதி வந்ததும் சொதியை இறக்கவும். இது இடியாப்பம் சாதம் தோசை சப்பாத்தி அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

9. பீட்ரூட் கோளா

தேவையானவை :-

பீட்ரூட் – 2, துவரம் பருப்பு – அரை கப், வரமிளகாய் – 6, சோம்பு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க:- கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-

துவரம்பருப்பைக் கழுவி ஒருகப் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை தோல் சீவித் துருவவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். வரமிளகாய் சோம்பு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். துவரம்பருப்பை தண்ணீர் வடிய விட்டு வரமிளகாய்க் கலவையில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை பெரிய வெங்காயத்தைத் தாளிக்கவும். இதில் துருவிய பீட்ரூட்டை வதக்கி அரைத்த பருப்புக் கலவையையும் போடவும். சிம்மில் அடுப்பை வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு பொலபொலவென ஆனது இறக்கவும்.


10.கவுனரிசிப் பாயாசம்

தேவையானவை :-

கவுனரிசி – 1 கப், தேங்காய் – 1 மூடி, சர்க்கரை – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-

கவுனரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் சோறு போல வேகவைத்து இறக்கி நன்கு மசித்து சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும். தேங்காயை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கவுனரிசியில் சேர்க்கவும். ஏலபொடி தூவி நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போடவும். நிவேதிக்கவும்.

டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் செப் 10,2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...