எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 டிசம்பர், 2014

கிருஷ்ண ஜெயந்தி, வரலெக்ஷ்மி விரதம், ஸ்பெஷல் நைவேத்தியங்கள்,KRISHNA JEYANTHI, VARALAKSHMI VIRATHAM RECIPES

ட்ரைஃப்ரூட்ஸ் பேணி, வெஜிடபிள் பேணி மூங்க்தால் கிச்சடி, பழ அப்பம். ---வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

ஓட்ஸ் லட்டு, கார்ஃப்ளோர் உருண்டை, பாப்கார்ன் பர்ஃபி, கிருஷ்ணப் ப்ரஸாத்.----
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். :

வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

1.ட்ரைஃப்ரூட்ஸ் பேணி:-

வெறும் தேங்காய்வெல்லம் பூரணத்துக்குப் பதிலாக இப்படியும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யலாம்.

தேவையானவை:-
பச்சரிசி – 2 கப்

ஃபில்லிங் :-
பாதாம் -15
பிஸ்தா – 15
முந்திரி – 15
பேரீச்சை – 6
கிஸ்மிஸ் – 30
செர்ரி – 10
டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்
கொப்பரை – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
மேல்மாவு.
பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும்.

ஃபில்லிங்க் செய்ய பாதாம் முந்திரியை ஊறவைத்து துண்டுகளாக நறுக்கவும். பேரீச்சை பிஸ்தாவையும் நறுக்கவும். செர்ரியை கொட்டை எடுத்து சின்னதாக நறுக்கவும். கொப்பரையை லேசாக வாசம் வரும் பக்குவம் வறுத்து டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் எல்லாவற்றையும் சேர்த்து தேன் ஊற்றிக் கலந்து பதினாறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால்  கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து  எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15  நிமிடம் வேகவைத்து எடுத்து நிவேதனம் செய்யவும்

2.வெஜ் பேணி :-

எப்போதும் போல உளுந்து அரைத்து வேகவைத்து வதக்கிக் காரக் கொழுக்கட்டை செய்யாமல் இப்படியும் செய்யலாம்.

தேவையானவை:-
பச்சரிசி – 2 கப்

ஃபில்லிங்க் செய்ய:-

அவித்த உருளைக்கிழங்கு – 1 ( பெரியது)
பீட்ரூட் சின்னம் – 1 துருவவும்
காரட் – 1 துருவவும்.
பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கவும்.
இஞ்சி – 1 இன்ச் – பொடியாக நறுக்கவும்.
மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்.
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்


செய்முறை:-
மேல்மாவு.
பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் தாளித்து பச்சைமிளகாய், இஞ்சி, காரட், பீட்ரூட் துருவலை வதக்கி இறக்கி வைத்து அதில் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக அரிந்த  கொத்துமல்லித் தழை, மிளகு ஜீரகத்தூள், வெண்ணெய் போட்டு நன்கு பிசைந்து பதினாறு உருண்டைகளாக உருட்டவும்.

மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால்  கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து  எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15  நிமிடம் வேகவைத்து எடுத்து நிவேதனம் செய்யவும்.

3. மூங்க்தால் கிச்சடி. :-
இது டெல்லியின் ஜண்டேவாலிமா மந்திர் என்ற கோயிலில் பிரதி வெள்ளிதோறும் ஆரத்திக்குப் பின் கொடுக்கப்படும் ப்ரசாதமாகும்.

தேவையானவை:-
பச்சரிசி – 1 கப்
உடைத்த பாசிப்பயறு ( மூங்க்தால் ) – ½ கப்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்.
ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய் பொடி – தேவைப்பட்டால் )
உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்.
உப்பு – 1 டீஸ்பூன்
தாளிக்க :-
நெய் – 2 டீஸ்பூன்
ஜீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:-
பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.

ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போட்டு நிவேதனம் செய்யவும்.

4. பழ அப்பம்.:-

தேவையானவை :-
கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை – 1 டேபிள் ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் – 1
(விரும்பினால் ஒரு துண்டு மாம்பழம், ஒரு சுளை பலாப்பழம் ஒரு பேரீச்சை மூன்றையும் அரை வாழைப்பழத்தோடு நன்கு அரைத்துச் சேர்க்கலாம். )
ஜீனி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலப்பொடி – 1 சிட்டிகை.
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
ஒரு பேசினில் ரவை மைதா கோதுமையைக் கலந்து அதில் உப்பு, ஜீனி, ஏலப்பொடி போடவும். வாழைப்பழத்தை நன்கு சேர்த்துப் பிசைந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு லேசாகத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். 5 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெயை சுடவைத்து மாவைக் கரண்டியால் நன்கு கலக்கி அடித்து ஊற்றி திருப்பி விட்டு எடுக்கவும். சரியான பக்குவம் இருந்தால் ஓரங்கள் நெளி நெளியாக அழகாக உப்பி வரும். இதில் பத்து அப்பங்கள் வரும். நிவேதனம் செய்யவும்.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். :-
உப்புச் சீடை, வெல்லச் சீடை , முள்ளு முறுக்கு என்று ரொட்டீனாக செய்யாமல் இந்தப் புதுவகைகள் செய்யலாம்.

ஓட்ஸ் லட்டு:-

தேவையானவை. :-

ஓட்ஸ் – 1 கப்
சன்ன வெள்ளை ரவை – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஜீனி – ½ கப்
பேரீச்சை – 2
முந்திரி – 8


செய்முறை:-
ஓட்ஸை வெறும் பானில் 5 நிமிடம் சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு நிமிடம் போட்டுப் பொடிக்கவும். வெள்ளை ரவையையும் லேசாக வாசம் வரும் பக்குவம் வெள்ளையாகவே வறுத்து இறக்கவும். ஜீனியைப் பொடித்து வைக்கவும். பேரீச்சையைப் பொடியாக அரிந்து வைக்கவும். முந்திரியை சிறுதுண்டுகளாக உடைத்து வைக்கவும்.

ஒரு பேசினில் ஓட்ஸ் மாவு, ரவை, பொடித்த ஜீனி, பேரீச்சை, முந்திரியைக் கலந்து வைத்து நெய்யைக் காய்ச்சி ஊற்றிப் பிடிக்கவும். பிடிக்க வராவிட்டால் லேசாகப் பால் தெளித்துப் பிடிக்கவும். 

பாப்கார்ன் பர்ஃபி:-

தேவையானவை:-
மக்காச் சோளம் – 1 கப்
வெல்லம் – 1 கப்
செய்முறை:-

கனமான குக்கர் அல்லது தோசைக்கல்லில் மக்காச்சோளத்தை லேசாக எண்ணெயில் பிசறிப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். குக்கரில் போட்டல் மேலே குக்கர் மூடியைத் திருப்பி வைக்கவேண்டும். தோசைக்கல்லில் போட்டால் கரண்டியை வைத்து இடைவெளி கொடுத்து அதன் மேல் தோசை மூடி வைக்கவும்.

3 நிமிடங்களில் சோளம் பொரிய ஆரம்பிக்கும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டுத் திறந்தால் சோளம் மலர்ந்து பூப் போல இருக்கும்.

இந்தப் பாப்கார்னில் மலர்ந்ததை மட்டும் எடுத்துக்கொள்ளவும். லேசாக இதை உரலில் இடித்துக்கொள்ளலாம். ரொம்பப் பொடியாகக் கூடாது. வெல்லத்தில் லேசாகத் தண்ணீர் விட்டு முத்துப் பாகு வைக்கவும். பாகைத் தட்டில் விட்டு தண்ணீர் தொட்டு உருட்டினால் முத்துப்போல உருட்ட வர வேண்டும். அதில் பாப்கார்னைப் போட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி பெரிய வில்லைகளாகப் போடவும். ஆறியதும் எடுக்க வரும். நிவேதனம் செய்யவும்.

கார்ன்ஃப்ளேக்ஸ் உருண்டை:-

தேவையானவை:-
கார்ன் ஃப்ளேக்ஸ் – 1 கப்
ஸ்ட்ராபெர்ரி பழம் – 4
மில்க் மெய்ட் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:-
கார்ன் ஃப்ளேக்ஸை லேசாக நொறுக்கிக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரியைக் காம்பு நீக்கித் துண்டுகளாக்கிச் சேர்க்கவும். அதில் மில்க் மெய்ட் ஊற்றிக் கலந்து உருண்டை பிடித்து நிவேதிக்கவும். இது சீக்கிரம் கரகரப்புப் போய் நமுத்துவிடும் என்பதால் அவ்வப்போது செய்து உடனே நிவேதனம் செய்து சாப்பிடலாம்.

கிருஷ்ண ப்ரசாதம்:-

இது இஸ்கான் கோயிலில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட சுருள் பூரி டைப் இனிப்பு. ஆனால் நீள அப்பளப்பூவை மடித்து ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியது போலச் செய்து இருந்தது.

தேவையானவை:-

மைதா – 2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை ( விரும்பினால் )
சர்க்கரை – 1 கப்
உப்பு -  1 சிட்டிகை.
ஆரஞ்ச் புட் கலர் – 1 சிட்டிகை.
எண்ணெய் –தேவையான அளவு

செய்முறை:-

மைதாவை ஒரு பவுலில் போட்டு உப்பு, புட்கலர், பேக்கிங் சோடாவுடன் நன்கு கலந்து நெய்யை உருக்கி ஊற்றி லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து எண்ணெயில் ஊறவிடவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும்.

இரண்டு மணி நேரம் ஊறியதும். சின்னச் சின்ன அப்பள உருண்டைகள் ( நெல்லிக்காய் அளவு எடுத்து ) போல எடுத்து நீளவாக்கில் மட்டும் தேய்க்கவும். நாலு ஐந்தை அதுபோல தேய்த்து ஒன்றின் மேல் ஒன்றை லேசாக நெய் தடவி மாவு தூவி அடுக்கி இன்னும் ஒரு முறை லேசாகத் தேய்த்து ( 4 , 5 நீள அப்பளப்பூவை ஒட்டினாற்போல ) எண்ணெயில் நன்கு பொறித்து எடுக்கவும்.

சூடாக இருக்கும் போதே பொடித்த சர்க்கரையில் புரட்டி அடுக்கவும். நிவேதனம் செய்யவும். எண்ணெய்க்குப் பதில் நெய் அல்லது டால்டாவிலும் பொறிக்கலாம்.

5 கருத்துகள்:

  1. இங்குள்ளது எல்லாமே ஸ்பெஷல் (வீட்டில் சொன்னது) தான்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2015/01/blog-post.html

    முடிந்து போது பார்த்து கருத்திடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி தனபாலன் சகோ

    வலைச்சரப் பகிர்வுக்கு நன்றி ஆதி வெங்கட் :)

    நன்றிடா ஜலீலா. :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...