அவரைக்காய் இளங்குழம்பு
தேவையானவை:- அவரைக்காய் – 150 கிராம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு- 2 பல், துவரம் பருப்பு – கால் கப், பெருங்காயம் – 1 சிறுதுண்டு, புளி – நெல்லி அளவு, உப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் – அரை டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு கொழுந்தாக, கொத்துமல்லி – 1 கைப்பிடி
செய்முறை:- துவரம் பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியைக் கழுவி நீளவாக்கில் நறுக்கவும். அவரைக்காயை நரம்பு எடுத்து இரண்டாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து நைத்து வைக்கவும். பச்சை மிளகாயைக் கழுவி இரண்டாக வகிர்ந்து வைக்கவும். கொத்துமல்லியைச் சுத்தம் செய்து கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். 8 கப் தண்ணீரில் அவரைக்காய் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை வேகப்போடவும். பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடி போட்டு உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். பருப்பை மசித்துச் சேர்த்துக் கொதித்ததும் இறக்குமுன் கொத்துமல்லியும் தட்டிய பூண்டும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு சீரகம் சோம்பு கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.






