எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

கோலா உருண்டைக் குழம்பு/பருப்பு உருண்டைக் குழம்பு.

கோலா உருண்டைக் குழம்பு/பருப்பு உருண்டைக் குழம்பு.

தேவையானவை :-  துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 8, தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், இளம் கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிது.  புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்,

தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து,வெந்தயம், தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு.

அரைக்க - 1  :- வரமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் மிளகு - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

அரைக்க 2. - தேங்காய் - கால் மூடி , சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல், சோம்பு - சிறிது.

செய்முறை :- துவரம்பருப்பைக் கழுவி இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தையும் இளம் கருவேப்பிலை, கொத்துமல்லியையும் பொடியாக அரியவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளியை சுத்தம் செய்து துண்டாக நறுக்கி வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும்.

துவரம்பருப்பை நீரை வடித்து வைக்கவும். மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ளவற்றில்  1 இல் இருந்து மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு உப்பு சேர்த்து நன்கு பொடிக்கவும். இதில் துவரம்பருப்பைச் சேர்த்து பெருபெருவென அரைத்து ஒரு பௌலில் போடவும். இதில் துருவிய தேங்காய் பொடியாக அரிந்த வெங்காயம் கருவேப்பிலை கொத்துமல்லி போட்டு நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி , கருவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் கரைத்துவைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள 2 இல் இருப்பவற்றை அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்கு கொதிவரத் துவங்கியதும் வெந்த கோலா உருண்டைகளைக் குழம்பில் சேர்க்கவும்.

இந்தக் கோலா உருண்டைகளை எண்ணெயில் வறுத்தும் போடலாம். அதே போல் இட்லிப் பாத்திரத்தில் அவிக்காமல் குழம்பை இன்னும் நீர்க்கக் கரைத்துக் கொதிக்க விட்டு ஒவ்வொன்றாக உருட்டியும் போட்டு வேகவைக்கலாம்.  அப்படி வேகவைக்கும்போது மூன்று மூன்றாக உருட்டிப் போட்டு வெந்து மேலே வந்ததும் மிச்சத்தையும் ஒவ்வொன்றாக உருட்டிப் போடவும். நடுவில் கரண்டி கொண்டு கிளறக்கூடாது. அப்படிக் கிளறினால் உருண்டைகள் உடைந்து குழம்பு கூழாகி விடும்.

இக்கோலா உருண்டைக் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். சாதம் தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
  

அப்பளம்.

அப்பளம்.

தேவையானவை :- உளுந்தம்பருப்பு - அரை கிலோ, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறு கட்டி, தண்ணீர் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை :- உளுந்தம்பருப்பை மிஷினில் அரைத்து சலிக்கவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் ஊறப்போடவும். உப்பையும் போட்டு கரைத்து மாவில் சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகப் பிசையவும். மாவு ஒன்று சேர்ந்ததும் தண்ணீர் ஊற்றாமல் சப்பாத்திக் கல்லில் போட்டு குழவியால் எண்ணேய் ஊற்றித் தடவித் தட்டவும். நன்கு ரப்பர் பதம் வரும்வரைதட்டி மெல்லிசாக நீளமாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு கார்க் அளவு துண்டுகள் வெட்டி எடுத்து வைக்கவும். ஒவ்வொரு துண்டையும் சப்பாத்திக் கல்லில் போட்டு லேசாக அரிசி மாவு தடவி தேய்க்கவும். இவை ஒரு பூரி அளவு வரும். இரண்டு அப்பளங்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றை வைத்துத் தேய்த்து நன்கு  பெரிய அப்பளமாகத் திரட்டவும்.

அதிகம் வெய்யில் படாமல் நிழலில் வெப்பம் படும் அளவு உலர்த்தவும். இவற்றை எண்ணெயை நன்கு காயவைத்துப் பொரிக்கவும். மிக சுவையான அப்பளங்கள் தயார். :) 

ஞாயிறு, 22 ஜூலை, 2018

காரைக்குடி கோழி மசாலை. KARAIKUDI CHICKEN MASALAI.

காரைக்குடி சிக்கன் மசாலை.

தேவையானவை :- கோழிக்கறி - அரை கிலோ. பெரிய வெங்காயம் - 1, சின்ன வெங்காயம் - 10,  தக்காளி - 1 பூண்டு - 4 பல், வரமிளகாய் - 12, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 10, கசகசா - அரை டீஸ்பூன், தேங்காய் - 1 சில், மல்லி - 1 டீஸ்பூன், எண்ணெய் - 50 மிலி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு தலா - 2, உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- கோழிக்கறியை கழுவிப் பிழிந்து வைக்கவும். பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய், மல்லி, சோம்பு , சீரகம், மிளகு, கசகசாவை வெதுப்பி எடுக்கவும். இத்துடன் தேங்காயும் பூண்டும் சேர்த்து மைய அரைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு தாளித்து வெங்காயம் பூண்டை வதக்கவும். இதில் சிக்கனையும் போட்டு நன்கு வதக்கி மசாலையையும் தக்காளியையும் போட்டு நன்கு திறக்கவும். இரண்டு மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மூடி  போட்டு வேகவிடவும். நன்கு வெந்து கழண்டதும் உப்பு சேர்த்து இன்னும்  இரு நிமிடங்கள் வைத்து இறக்கவும். இதை சப்பாத்தி தோசை புல்கா, ருமாலி ரொட்டி , குல்சா  போன்றவற்றுக்கும் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
  

புதன், 18 ஜூலை, 2018

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.

தேவையானவை :-

சர்க்கரை வள்ளிக்கிழங்கு-  4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன்,  தாளிக்க - எண்ணெய் - 2 டீஸ்பூன். கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வேகவைத்துத் தோலுரிக்கவும். புட்டுபோல உதிர்த்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம் கருவேப்பிலையைத் தாளிக்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின் உதிர்த்த சர்க்கரைவள்ளிக்கிழங்கையும் உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கலக்கி கிளறி இறக்கி வெண்டைக்காய் புளிக்குழம்பு  வைத்து சூடான சாதத்தோடு பரிமாறவும். :)  உங்களுக்கே இல்லாத அளவு கிண்ணம் காலியாகிவிடும். :)
  
Related Posts Plugin for WordPress, Blogger...