எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2020

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி :-


தேவையானவை :- பாசுமதி அரிசி - 2 கப், மட்டன் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், அரைக்க :- பச்சை மிளகாய் - 3, சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பட்டை , கிராம்பு, ஏலக்காய் - 1 துண்டு, புதினா கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன் , தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன். எலுமிச்சை  - அரை மூடி. மீளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - ஒரு டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை , பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு - தலா ஒன்று. கிராம்பு, ஏலக்காய் - தலா 2. புதினா கொத்துமல்லித்தழைகள் - பொடியாக அரிந்தது இரு கைப்பிடிகள். 

செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கழுவி வைக்கவும். வெங்காயத்தை நீளமாக அரியவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ மராட்டிமொக்கு, தாளித்து வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும். இதில் பச்சை மிளகாய் , இஞ்சிபூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வறுத்து மட்டனைச் சேர்க்கவும். மட்டனைப் போட்டு நன்கு திறக்கி மஞ்சள்தூள் மல்லித்தூள், மிளகாய்த்தூள் போடவும். எல்லாம் ஒன்று சேர்ந்ததும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கிக் குழைய விடவும். அதன் பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு  வதக்கி கால் கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும். வெந்ததும் குக்கரைத் திறந்து அரிசி, உப்பு, புதினா கொத்துமல்லித்தழைகளைச் சேர்த்து கலக்கி இன்னும் ஒரு விசில் வைத்து இறக்கவும். எலுமிச்சை பிழிந்து கலந்து விட்டு சிறிது நேரம் கழித்து சிப்ஸ், வெங்காயத்தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும். 


  

சனி, 19 டிசம்பர், 2020

சிக்கன் குருமா

சிக்கன் குருமா/கோழிக்குருமா.


தேவையானவை:- சிக்கன் -அரை கிலோ,பெரிய வெங்காயம் -2, தக்காளி - 2, தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் -8 - 10, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் -4, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, தாளிக்க :- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, கல்பாசிப்பூ, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை - தலா 1, உப்பு - 1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது. 

செய்முறை:- சிக்கனைக் கழுவி குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, கசகசாவை கால் டீஸ்பூன் எண்ணெயில் வெதுப்பி பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். இதில் மட்டனைப் போட்டுத் திறக்கி அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டுக் கொதி வந்ததும் 20 நிமிடம் சிம்மில் வைத்து வேகவைக்கவும். அதன் பின் உப்பு சேர்த்து இரு நிமிடங்கள் கொதித்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சாதம் அனைத்திற்கும் ஏற்றது. 

செவ்வாய், 15 டிசம்பர், 2020

லெமன் சேமியா

லெமன் சேமியா


தேவையானவை:- சேமியா - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் - 1, காரட் -சின்னம் 1, பட்டாணி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 1,உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை மூடி. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெங்காயம், பச்சைமிளகாய், காரட்டை நீளமாக நறுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பட்டாணி, கேரட்டைத் தாளிக்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்புச்  சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்ததும் சேமியாவைச் சேர்த்துக் கிளறி தீயை அடக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு இரு நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை அணைத்து மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு கலக்கித் திரும்ப மூடி வைக்கவும். தக்காளி சாஸ் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும். 
  

வெள்ளி, 27 நவம்பர், 2020

பலகாய் மண்டி.

பலகாய் மண்டி.


தேவையானவை:- நாட்டுக் காய்கள் - முருங்கைக்காய் - 1, கத்திரிக்காய் - 2, வாழைக்காய் - பாதி, ( பலா விதை இருந்தால் வேகவைத்து இரண்டாக நறுக்கி சேர்க்கலாம் ), உருளைக்கிழங்கு - சின்னம் ஒன்று, (மாவத்தல் - 8 , அவரைவத்தல் - 6, தட்டைப்பயிறு - அரை கப்  இது மூன்றையும் வேகவைத்து வைக்கவும்.) பச்சைமிளகாய் - 8, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, அரிசி களைந்த திக் தண்ணீர் - 2 கப், உப்பு - அரை டீஸ்பூன், புளி - 4 சுளை, எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறவைக்கவும். காய்கறிகளை இரண்டு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயையும் ஒரு இஞ்ச் துண்டாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை பச்சைமிளகாயைச் சேர்க்கவும். லேசாக வதங்கியதும் வெங்காயம் பூண்டு, காய்களைச் சேர்த்து இன்னும் சில நிமிடம் வதக்கவும்.இதில் உப்புப் புளியை மண்டியோடு கரைத்து ஊற்றவும். கொதி வந்ததும் மூடி போட்டுப் பத்து நிமிடம் நன்கு வேக வைக்கவும். கடைசியாக வேகவைத்த மாவத்தல் கத்திரிவத்தல், தட்டைப்பயறு போட்டு இன்னும் சில நிமிடம் வேகவைத்து இறக்கவும் . இன்னும் மண்டி திக்காக வேண்டுமென்றால் பச்சரிசி அரை டீஸ்பூன், கால் டீஸ்பூன் வெந்தயம், சிறு துண்டு பெருங்காயத்தை வறுத்துப் பொடித்துப் போடவும். இதுதயிர்சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி தோசையுடனும் சாப்பிடலாம். 
  

திங்கள், 23 நவம்பர், 2020

மசால் வடை / ஆமை வடை.

மசால் வடை / ஆமை வடை. 


தேவையானவை:- கடலைப்பருப்பு - 1 கப், பச்சைமிளகாய் - 2, வரமிளகாய் - 2, இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, பெரிய வெங்காயம் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, சோம்பு - 1 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 





செய்முறை:- கடலைப்பருப்பை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். நீரை வடித்து பச்சைமிளகாய் , வரமிளகாய், சோம்பு, இஞ்சி உப்புடன் அரைத்தெடுக்கவும். வெங்காயம் கருவேப்பிலையைப் பொடியாக அரிந்து போட்டு நன்கு பிசைந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இது மாலையில் காஃபி டீயோடு சாப்பிட சுவையாக இருக்கும். 

 
  

வியாழன், 19 நவம்பர், 2020

பருப்புச் சட்னி ( பருப்பரைச்சுக் கொதிக்க வைத்தல் )

பருப்புச் சட்னி ( பருப்பரைச்சுக் கொதிக்க வைத்தல் ) 



தேவையானவை:- துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 3 ( சோம்பு, சீரகம் விரும்பினால் சிறிது ) பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, புளி 1 சுளை, உப்பு - அரை டீஸ்பூன் தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து வரமிளகாய், சோம்பு சீரகத்துடன் மைய அரைக்கவும். பெரியவெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து சிவந்ததும் வெங்காயம் தக்காளியை வதக்கி ஒரு கப் தண்ணீரில் உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். இதிலேயே அரைத்த விழுதையும் சேர்த்து இன்னும் அரை கப் நீரூற்றிக் கொதித்து வெந்ததும் இறக்கவும். இது இட்லிதோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. குருணை அல்லது கேப்பைக் களி செய்தால் இதோடு மாவத்தலையும் ஊறவைத்துச் சேர்த்து வேகவைத்துப் பருப்பரைத்துக் கொதிக்க வைப்போம். 
  

புதன், 18 நவம்பர், 2020

தர்ப்பூசணி தேன் சாறு.

தர்ப்பூசணி தேன் சாறு. 



தேவையானவை:- தர்ப்பூசணி - 1 கீற்று, எலுமிச்சைச் சாறு - சில துளிகள், தூள் சர்க்கரை - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து உயர கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி அருந்தவும். 

  

செவ்வாய், 17 நவம்பர், 2020

பாகற்காய் பிட்ளை

பாகற்காய் பிட்ளை


தேவையானவை:- பாகற்காய் - 200 கி. துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தட்டைப்பயிறு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் - 1 சில்லு, வரமிளகாய் - 5, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வரமல்லி - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 10. சின்ன வெங்காயம் - 8 தக்காளி - 1, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு உளுந்து , சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- ஒரு டீஸ்பூன் எண்ணெயில் ஸ்லைசாக நறுக்கிய பாகற்காயை வதக்கி சிறிது நீரூற்றி வேகவைத்து இறக்கவும். குக்கரில் துவரம்பருப்பையும் தட்டைப்பயிறையும் தனித்தனியாகக் கிண்ணங்களில் போட்டு நன்கு வேகவைத்து இறக்கவும்.வரமிளகாய், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துத் தேங்காயோடு அரைத்து வைக்கவும். உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறப்போட்டுச் சாறெடுக்கவும். இதை பாகற்காயோடு போட்டு சுத்தம் செய்த வெங்காயம் தக்காளியோடு வேகப்போடவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். இதில் வறுத்துப் பொடித்த சாம்பார் பொடியைப் போட்டு நன்கு கொதிக்க விட்டுத் தட்டைப்பயிறும் வெந்த துவரம்பருப்பையும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து கொட்டி உபயோகிக்கவும். 

  

திங்கள், 16 நவம்பர், 2020

மேத்தி தேப்லா.

மேத்தி தேப்லா. 


தேவையானவை:- வெந்தயக் கீரை - 1 கட்டு, கோதுமை மாவு - 2 கப், ஓமம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். எண்ணெய் - சுட தேவையான அளவு.

செய்முறை:- வெந்தயக் கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி மாவில் போட்டு அனைத்துப் பொருட்களையும் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசையவும். நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைத்து கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துத் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். 
 

கத்திரிக்காய்க் கூட்டு.

கத்திரிக்காய்க் கூட்டு. 


தேவையானவை :- கத்திரிக்காய் - 4 , சின்ன வெங்காயம் - 4, துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், தாளிக்க உளுந்து, சீரகம் - தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- துவரப்பருப்பைக் குக்கரில் கால் கப் நீர் ஊற்றி முக்கால் பதம் வேகவிடவும். வெந்ததும் சதுரமாக நறுக்கிய கத்திரிக்காய், சின்ன வெங்காயம் போட்டு இன்னும் கால் கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும் சாம்பார் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். இதில் உளுந்து சீரகம் கருவேப்பிலையை எண்ணெயில் தாளித்துப் போட்டுக்  கலந்து உபயோகிக்கவும்.  
  

வியாழன், 12 நவம்பர், 2020

பாசிப்பயறு சாட்

பாசிப்பயறு சாட்



தேவையானவை :- பாசிப்பயறு - 1 கப் அவித்தது, பொடியாக அரிந்த வெங்காயம் - 2 டீஸ்பூன், பொடியாக அரிந்த தக்காளி - 2 டீஸ்பூன் , சாட் மசாலா- சிறிது அல்லது உப்பு - சிறிது.

செய்முறை :- அனைத்தையும் கலந்து சாப்பிடவும். தேவைப்பட்டால் மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி போட்டுச் சாப்பிடவும். 
  

செவ்வாய், 10 நவம்பர், 2020

பாசிப்பயறுக் குழம்பு

பாசிப்பயறுக் குழம்பு 


தேவையானவை :- பாசிப்பயறு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், புளி - இரண்டு சுளை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம்  - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை. பூண்டு - ஒரு பல். 


செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில்  வேகவிடவும். வெந்த பயரில் வெங்காயம் தக்காளியை அரிந்து போட்டு உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், சாம்பார் தூள் போடவும். ஐந்து நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துப் பூண்டைத் தட்டிப்போட்டு இறக்கவும். சூடாக சாதம் இட்லி தோசையுடன் பரிமாறவும். 
  

புதன், 28 அக்டோபர், 2020

தாளிச்ச பருப்பு.

தாளிச்ச பருப்பு:-


தேவையானவை :- துவரம்பருப்பு - 1 கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், வெங்காயம் - 2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது, கருவேப்பிலை - 1இணுக்கு, வரமிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை :- குக்கரில் துவரம்பருப்பைக் கழுவிப் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து ஒரு விசில் வேகவைக்கவும். ( பதமாக இருக்க வேண்டும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு , உளுந்து தாளித்து சிவந்ததும், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை போட்டு உப்புச் சேர்த்து பருப்பைப் போட்டுக் கிளறி இறக்கவும். இது காரக் குழம்பு, புளிக்குழம்பு சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது. 
  

புதன், 21 அக்டோபர், 2020

மஞ்சள் காமாலைக்கான 8 உணவு வகைகள்

மஞ்சள் காமாலைக்கான உணவு வகைகள். 

மஞ்சள் காமாலை வந்ததும் கீழாநெல்லிச்சாறு குடிக்க வேண்டியது அவசியம். அத்துடன் வெள்ளை முள்ளங்கிச்சாறை எடுத்துப் பாலுடன் கலந்து குளுக்கோஸ் போட்டு அருந்தலாம். கோவை இலை, கரிசலாங்கண்ணி இலை, அருகம்புல் சேர்த்து அரைத்துச் சாறு பிழிந்து அருந்துவது நல்லது. 

உளுந்து சேர்த்திருப்பதால் இட்லி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதோ சில உணவுகள். ஆவியில் வேகவைத்து லேசாக உப்பும் சீரகமும் சேர்த்தது.

1.இட்லி இடியப்பம். 


இடியப்ப மாவில் உப்புப் போட்டு வெந்நீர் ஊற்றிப் பிசைந்து  இட்லி போலப் பிழிந்து கொடுக்கலாம். 

2.அரிசி உப்புமா. 


அரிசியை உடைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயில் சிறிது வெங்காயம், கடுகு தாளித்து உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவைத்துக் கொடுக்கலாம். 

3.புடலங்காய் கூட்டு 


புடலங்காய், வெங்காயம் சீரகம் பாசிப்பருப்புச் சேர்த்துக் குக்கரில் வேகவைத்து உப்பு சேர்த்து மசித்துக் கொடுக்கலாம்.

4. இட்லி 


உளுந்து கம்மியாகப் போட்டு ( அரிசி :உளுந்து = 6:1 ) என்ற விகிதத்தில் அரைத்து உப்பு சேர்த்துப் புளிக்க வைத்து இட்லியாக ஊற்றிக் கொடுக்கலாம்.

5. காரட் பொரியல்


ஆவியில் காரட்டை வேகவைத்து கால் ஸ்பூன் எண்ணெயில் சிறிது வெங்காயத்தை வதக்கி உப்பு சேர்த்துப் பிரட்டிக் கொடுக்கவும். 

6. உருளை பொரியல்.


உருளையைத் தோல் சீவிச் சதுரத் துண்டுகளாக்கி சிறிது உப்பு லேசாக மிளகாய்த்தூள் போட்டுப் பிரட்டி குக்கரில் நன்கு வேகவைத்து எடுத்துக் கால் ஸ்பூன் எண்ணெயில் வதக்கிக் கொடுக்கவும். 

7. பீன்ஸ் பொரியல்


பீன்ஸைப் பொடியாக அரிந்து ஆவியில் வேகவைத்து சிறிது எண்ணெயில் வெங்காயம், உப்பு சேர்த்துக் காரட் போல வதக்கிக் கொடுக்கவும். 

8. முட்டைக்கோஸ் கூட்டு 


முட்டைக்கோஸைப் பொடியாக அரிந்து பாசிப்பருப்போடு போட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து அரைக் கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவைத்துக் கொடுக்கவும். 

இவை அனைத்தும் செரிமானத்துக்கு ஏற்றது. 
  

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சிக்கன் விண்ட்லூ.

சிக்கன் விண்ட்லூ


தேவையானவை :- சிக்கன் 350 கிராம்,(லெக் பீஸ் - 3 ) , பெரிய வெங்காயம் - 1 , பூண்டு - 4 பல், இஞ்சி - 1 இஞ்ச் துண்டு, வரமிளகாய் - 8 , வினிகர் - 1 டேபிள் ஸ்பூன், மல்லி - 1 டேபிள் ஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன் , சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை ( கசூரி மேத்தி ) - 1 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 3. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். வெங்காயத்தாள் - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது. 

செய்முறை:- மிளகாய்களை வினிகரில் ஊறப்போடவும். சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி பூண்டு வெங்காயத்தைக் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வினிகரில் ஊறிய வரமிளகாயோடு மல்லி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு சேர்த்து மைய அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் இஞ்சி பூண்டு மசாலாவை எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். அதில் சிக்கனைப் போட்டு நன்கு வதக்கி வினிகரோடு அரைத்த மசாலாவை ஊற்றவும் நன்கு கலக்கி விட்டு உப்பு , மஞ்சள்தூள், கசூரி மேத்தி சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேகவிடவும். வெந்ததும் பொடியாக அரிந்த வெங்காய்த்தாள் தூவி இறக்கி சப்பாத்தி, ரொட்டி, நான், குல்ச்சா உடன் பரிமாறவும். 
  

திங்கள், 12 அக்டோபர், 2020

சிக்கன் பிரியாணி.

சிக்கன் பிரியாணி.



தேவையானவை.:-
சிக்கன் - 1/2 கி
பாஸ்மதி அரிசி - 3 கப்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட். - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
புதினா, கொத்துமல்லி - 3 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது.
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை இலை - 1
பட்டை - 4 இஞ்ச்
கிராம்பு  - 4
ஏலக்காய் - 4
கல்பாசிப்பூ - சிறிது.

செய்முறை:-
சிக்கனைக் கழுவி தண்ணீரை வடித்துப் பிழிந்து வைக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து வறுத்து வைக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பட்டை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ போடவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு தண்ணீராக வதக்கவும்.  அதில் இஞ்சி பூண்டு விழுதைப்  போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி சிக்கனைச் சேர்க்கவும். அதில் பாதி பொடியாக அரிந்த தக்காளி,தயிர், பச்சை மிளகாய், வரமிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் பொடி போட்டு, பாதி புதினா, கொத்துமல்லித்தழைகளைப் போட்டு வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றி  3 விசில் வரும்வரை ப்ரஷர் குக்கரில் வைக்கவும்.

ஆறியதும் திறந்து பாசுமதி அரிசி, மிச்ச  தக்காளி, புதினா, கொத்துமல்லித்தழைகளை போட்டு 5 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கிளறவும். ( ஏற்கனவே ஒரு கப் தண்ணீரும் தயிரும் இருப்பதால் 5 கப் போதும் . ). ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கிளறி சுடச் சுட உருளை சிப்ஸ், அவித்த முட்டை, கத்திரிக்காய் க்ரேவி, வெங்காயத் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்

வெள்ளி, 9 அக்டோபர், 2020

சிக்கன் சாப்ஸ்.

சிக்கன் சாப்ஸ். 


தேவையானவை:- சிறிதளவு எலும்புடன் கூடிய கோழித்துண்டுகள் - கால் கிலோ. வரமிளகாய் - 15 உப்பு - 1 டீஸ்பூன், முட்டை - 2 , எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கோழியைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போடவும். வரமிளகாயை உப்பு சேர்த்து மைய அரைத்துக் கோழியில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சுமார் அரைமணி நேரம் சிம்மில் வெந்தபிறகு உப்பு சேர்த்து இன்னும் சிறிது வேகவிட்டுச் சுண்டியதும் இறக்கவும். 

முட்டைகளை நன்கு அடித்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கோழித்துண்டுகளை அடித்த முட்டையில் நன்கு தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இது சும்மா சாப்பிடவும் நன்றாக இருக்கும். ரசம் சாதம் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். 
 
Related Posts Plugin for WordPress, Blogger...