எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 டிசம்பர், 2022

சுகியன்:-

சுகியன்:-


தேவையானவை:- இட்லி மாவு ரெண்டு கப், கடலைப்பருப்பு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பை வேகவைத்து வெல்லம் தேங்காய் சேர்த்துக் கிளறிப் பூரணம் செய்து முந்திரியை வறுத்துப் போடவும். இந்தப் பூரணத்தை எலுமிச்சை அளவு உருட்டி வைக்கவும். இந்த உருண்டைகளை இட்லிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..

 

புதன், 21 டிசம்பர், 2022

அசோகா :-

அசோகா :-


தேவையானவை :- பாசிப்பருப்பு – 1 கப் , கோதுமை மாவு – 1 கப்,  எண்ணெய் - அரைகப், நெய் – கால் கப், டால்டா - கால் கப், சர்க்கரை – ஒன்றரைகப். முந்திரி பாதாம் கிஸ்மிஸ் – தலா 8, ஏலக்காய் – 2 தோலோடு பொடிக்கவும். ரெட் ஃபுட் கலர் - சிறிது.

செய்முறை :- பாசிப்பருப்பை வேகவிடவும். நன்கு வெந்ததும் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். கோதுமை மாவை எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் நீர்க்கக் கரைத்த பாசிப்பருப்பை ஊற்றவும். இரண்டும் சேர்ந்து சுருண்டு வரும்போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கலர்ப்பொடி சேர்க்கவும், நெய்யை உருக்கி அதில் முந்திரி பாதாம் கிஸ்மிஸை வறுக்கவும். உருக்கிய மிச்ச நெய்யையும் டால்டாவையும்  அல்வாவில் அவ்வப்போது ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வந்ததும் இறக்கி முந்திரி பாதம் கிஸ்மிஸை சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

 

 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

இருபருப்பு வடை.

இருபருப்பு வடை.


தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், வெள்ளை உருண்டை உளுந்தம் பருப்பு -1 கப், பச்சைமிளகாய் – 2, வரமிளகாய்- 2, கருவேப்பிலை, கொத்துமல்லி – தலா ஒரு கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பையும் உளுந்தம் பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் பச்சைமிளகாய், வரமிளகாயை உப்பு சேர்த்து அரைத்து உளுந்தையும் கடலைப்பருப்பையும் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அதில் கருவேப்பிலை கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து போட்டு இளக்கமாகத் தட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

 

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

.உளுந்துக் களி:-

.உளுந்துக் களி:-


தேவையானவை :- வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1 கப், வெல்லம் துருவியது – கால் கப், கருப்பட்டி துருவியது – அரை கப், உப்பு – 1 சிட்டிகை, பால் – 1 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- வெதுவெதுப்பான பாலில் உளுந்து மாவைக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். மாவு திரண்டு வரும்போது உப்பு, துருவிய வெல்லம், கருப்பட்டி சேர்க்கவும். நன்கு சேர்ந்து திரண்டதும் நெய்யை ஊற்றவும். தொட்டால் ஒட்டாத பதம் வந்ததும் எடுத்து உபயோகிக்கவும்.

 

வெள்ளி, 16 டிசம்பர், 2022

பாசிப்பருப்பு போளி.:-

பாசிப்பருப்பு போளி.:-


தேவையானவை:- மைதா – 2 கப், பாசிப்பருப்பு – முக்கால் கப், சன்ன தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – ஒரு கப், நெய் – அரை கப். உப்பு – 1 சிட்டிகை. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை. பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன்.

செய்முறை: மைதாவில் மஞ்சள்தூள், உப்பு போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்து எண்ணெயில் இரண்டு மணி நேரம் ஊறப்போடவும்.பாசிப்பருப்பை நறுக்குப் பதத்தில் வேகவைத்து தேங்காய்த்துருவலும் சர்க்கரையும் சேர்த்து அரைக்கவும். இதில் ஏலத்தூள், பச்சரிசி மாவு சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். மைதாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துத் தட்டி அதில் பாசிப்பருப்புப் பூரணத்தை வைத்து எண்ணெய் தொட்டு போளியாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

 

புதன், 14 டிசம்பர், 2022

பெசரட்:-

பெசரட்:-


தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பயறு – 2 கப், பச்சை மிளகாய் – 2 பொடியாக அரியவும்., தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 இன்ச் துருவவும்., பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்., சீரகம் – ½ டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 30 மிலி

செய்முறை :- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கொரகொரப்பாக அரைக்கவும். அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், இஞ்சி, பெரிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சிறிது கனமான தோசைகளாக சுட்டு திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வேகவைத்து தக்காளித் துவையல் அல்லது மாங்காய்த் தொக்கு அல்லது கோங்குரா சட்னியுடன் பரிமாறவும்.

 

திங்கள், 12 டிசம்பர், 2022

துவரம்பருப்பு தோசை:-

துவரம்பருப்பு தோசை:-


தேவையானவை :- துவரம் பருப்பு – அரை கப், பச்சரிசி +புழுங்கல் அரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன்,. உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி, பொடியாக அரிந்த வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- துவரம்பருப்பைக் களைந்து தனியாக ஊறவைக்கவும். பச்சரிசி, புழுங்கல் அரிசி , உளுந்தை வெந்தயத்தோடு களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் அரிசி உளுந்தை அரைத்து அதன்பின் துவரம் பருப்பைச் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைக்கவும். 4 மணி நேரம் கழித்து வெங்காயம் சேர்த்துக் கரைத்து தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி காரச் சட்னியோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

பாசிப்பருப்பு அப்பம்:-

பாசிப்பருப்பு அப்பம்:-


தேவையானவை :- பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், வெல்லம் + கருப்பட்டி – அரை கப். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இதில் வெல்லம் கருப்பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை நன்கு மலரும்படி வேகவைத்து இந்த மாவில் போட்டுக் கலக்கி எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

 

திங்கள், 28 நவம்பர், 2022

கறுப்பு உளுந்து வடை:-

கறுப்பு உளுந்து வடை:-


தேவையானவை :- கறுப்பு உளுந்து – 1 கப், மிளகு – 1 டீஸ்பூன், உப்பு – 1/3 டீஸ்பூன்., எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கறுப்பு உளுந்தைத் தோலோடு கழுவி ஊறவைக்கவும். 10 நிமிஷம் ஊறியதும் மிக்ஸியில் உப்பு மிளகு போட்டு கொரகொரப்பாக ஆட்டிக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி மாவை உருட்டி வைத்து இன்னொரு எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரால் மூடி நன்கு மெலிசாகத் தகடுபோல் தட்டவும். பாலிதீன் ஷீட்டை எடுத்து விட்டு நடுவில் ஓட்டை போட்டுத் தட்டிய வடையை எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும்

 

வெள்ளி, 25 நவம்பர், 2022

கடலைப்பருப்புப் பாயாசம்:-

கடலைப்பருப்புப் பாயாசம்:-


தேவையானவை:- கடலைப்பருப்பு – அரை கப், திக் தேங்காப் பால் – அரை கப், வெல்லம் – முக்கால் கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6

செய்முறை:- கடலைப்பருப்பைக் குக்கரில் வேகவைத்து லேசாக மசிக்கவும். வெல்லத்தை அரை கப் வெந்நீரில் கரைத்து வடிகட்டி வெந்த கடலைப்பருப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஏலப்பொடி போட்டு நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்துப் பரிமாறவும்.

 

சனி, 19 நவம்பர், 2022

துவரம்பருப்புத் துவையல்.:-

துவரம்பருப்புத் துவையல்.:-


தேவையானவை :- துவரம்பருப்பு – 1 கப், தேங்காய் – கால் மூடி, வரமிளகாய் – 2, உப்பு – கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல்.

செய்முறை :-துவரம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். மிளகாயையும் அதில் போட்டு வறுத்து இறக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், துவரம் பருப்பைப் பொடி செய்துகொண்டு அதில் தேங்காய்த்துருவல் உப்பு போட்டு தேவையான நீர் சேர்த்து கொரகொரப்பாக் அரைக்கவும். 2 பல் பூண்டை உரித்துப் போட்டு கடைசியாக இரண்டு சுற்றுச் சுற்றி இறக்கவும்.

 

பாசிப்பருப்பு சுண்டல்:-

பாசிப்பருப்பு சுண்டல்:-


தேவையானவை:- பாசிப்பருப்பு – 2 கப், காரட் – 1 டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – 1 கைப்பிடி, தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், எண்ணெய், கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1. உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவிடவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துத் துருவிய காரட் கொழுந்து கருவேப்பிலை சேர்க்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் உப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கிளறி தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.

 

திங்கள், 14 நவம்பர், 2022

தால் ஃப்ரை:-

தால் ஃப்ரை:-


தேவையானவை:- துவரம்பருப்பு - 1 கப், பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 1, பச்சைமிளகாய் - 2, உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை - சிறிது. கொத்துமல்லி - சிறிது.


செய்முறை:-துவரம்பருப்பைக் கழுவிக் குக்கரிப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ஒரு பானில் நெய்யை ஊற்றி சீரகம், வரமிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இதில் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய்,  இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வதக்கித் தக்காளியைச் சேர்க்கவும். உப்பையும் போட்டால் தக்காளி சீக்கிரம் மசியும். மசிந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா போட்டு எண்ணெய் பிரிந்ததும் வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து ஊற்றவும். கொதித்ததும் காய்ந்த வெந்தயக் கீரை, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.சப்பாத்தி, சாதம், மேத்தி பரோட்டா , நான் , ருமாலி ரொட்டி ஆகியவற்றோடு இது நன்றாக இருக்கும்.

 

வெள்ளி, 11 நவம்பர், 2022

பாதாம் பூரிப் பாயாசம்:-

பாதாம் பூரிப் பாயாசம்:-


தேவையானவை :- பாதாம் – 100 கி, மைதா – 2 கப், கோதுமை – 1 கப், பால் – 10 லி, மில்க் மெய்ட் டின் – 1, சீனி – 1 கிலோ, பாதாம் எசன்ஸ் – சில சொட்டு, குங்குமப்பூ – அரை டப்பா. , எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:- பாதாமை வெந்நீரில் ஊறவைத்துத் தோலுரித்து பால் விட்டு மைய அரைக்கவும். அதில் மைதா கோதுமை போட்டு ஒரு சிட்டிகை உப்புப் போட்டுப் பிசைந்து பட்டன் சைஸில் பூரி செய்து பொறித்தெடுக்கவும்.பாலைக் காய்ச்சி சீனி சேர்த்துக் கரைந்ததும் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கரைத்து பாதாம் எசென்ஸ் போடவும். குங்குமப்பூவைப் வெதுவெதுப்பான பாலில் கரைத்து ஊற்றவும். பரிமாறும்போது கப்புகளில் கொஞ்சம் பாதாம் பூரியைப் போட்டு வெதுவெதுப்பான பாலை ஊற்றிப் பரிமாறவும்.

 

புதன், 9 நவம்பர், 2022

கோலா உருண்டைக் குழம்பு:-

கோலா உருண்டைக் குழம்பு:-


தேவையானவை :-  துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 8, தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், இளம் கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிது.  புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து,வெந்தயம், தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு. அரைக்க - 1  :- வரமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் மிளகு - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன். அரைக்க 2. - தேங்காய் - கால் மூடி , சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல், சோம்பு - சிறிது.


செய்முறை :- துவரம்பருப்பைக் கழுவி இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தையும் இளம் கருவேப்பிலை, கொத்துமல்லியையும் பொடியாக அரியவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளியை சுத்தம் செய்து துண்டாக நறுக்கி வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும். துவரம்பருப்பை நீரை வடித்து வைக்கவும். மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ளவற்றில்  1 இல் இருந்து மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு உப்பு சேர்த்து நன்கு பொடிக்கவும். இதில் துவரம்பருப்பைச் சேர்த்து பெருபெருவென அரைத்து ஒரு பௌலில் போடவும். இதில் துருவிய தேங்காய் பொடியாக அரிந்த வெங்காயம் கருவேப்பிலை கொத்துமல்லி போட்டு நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி , கருவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் கரைத்துவைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள 2 இல் இருப்பவற்றை அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்கு கொதிவரத் துவங்கியதும் வெந்த கோலா உருண்டைகளைக் குழம்பில் சேர்க்கவும். கொதித்து உருண்டைகள் மேலே வந்ததும் உபயோகிக்கவும்.

 

ஞாயிறு, 6 நவம்பர், 2022

டோக்ளா:-

டோக்ளா:-


தேவையானவை:- பாசிப்பருப்பு மாவு – 1 கப், கடலை மாவு – 2 டீஸ்பூன், ஈனோ உப்பு – 1 சிட்டிகை, சமையல் சோடா – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், காரட், கொத்துமல்லி – பொடியாக துருவியது தலா ஒரு கைப்பிடி , எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், சீனி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பு மாவையும் கடலை மாவையும் கலந்து உப்பு, ஈனோ சால்ட், சமையல் சோடா சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து 20 நிமிடம் வைக்கவும். இதை குக்கரில் வைத்து அல்லது இட்லியாக வேகவைத்து துண்டுகள் செய்யவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு தாளித்து இதன் மேல் கொட்டி சீனியை எலுமிச்சை சாற்றில் கரைத்து ஸ்ப்ரே செய்து, கொத்துமல்லி காரட்தூவிப் பரிமாறவும்.

 

வெள்ளி, 4 நவம்பர், 2022

தாளிச்ச பருப்பு:-

தாளிச்ச பருப்பு:-


தேவையானவை :- துவரம்பருப்பு - 1 கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், வெங்காயம் - 2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது, கருவேப்பிலை - 1இணுக்கு, வரமிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை :- குக்கரில் துவரம்பருப்பைக் கழுவிப் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து ஒரு விசில் வேகவைக்கவும். ( பதமாக இருக்க வேண்டும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு , உளுந்து தாளித்து சிவந்ததும், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை போட்டு உப்புச் சேர்த்து பருப்பைப் போட்டுக் கிளறி இறக்கவும். இது காரக் குழம்பு, புளிக்குழம்பு சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.

 

புதன், 2 நவம்பர், 2022

பருப்புப் பொடி:-

பருப்புப் பொடி:-


தேவையானவை :- துவரம்பருப்பு -  கால் கப், பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, வரமிளகாய் - 1, பூண்டு - 1 பல், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை :- வெறும் வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் வரமிளகாய், பொட்டுக்கடலை, பெருங்காய்த்தூள், போட்டுப் புரட்டி பூண்டையும் உப்பையும் போட்டு இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைக்கவும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்தப் பருப்புப் பொடியைச் சேர்த்து உண்ணலாம்.

 

திங்கள், 31 அக்டோபர், 2022

பாசிப்பருப்பு மசியல்:-

பாசிப்பருப்பு மசியல்:-


தேவையானவை:- பாசிப்பருப்பு – ஒரு கப், சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு – 2 பல், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – அரை டீஸ்பூன், தாளிக்க:- உளுந்து, சீரகம் தலா கால் டீஸ்பூன், வரமிளகாய் – 1.

செய்முறை:- பாசிப்பருப்பில் அரை கப் நீரூற்றி, சீரகம் மஞ்சள்தூள் சேர்த்துப் பூண்டைத் தட்டிப் போட்டு குக்கரில் ஒரு விசில் வேகவைத்து இறக்கவும். எண்ணெயில் உளுந்து சீரகம் கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துப் பருப்பில் கொட்டி உப்பு சேர்த்து மசிக்கவும். சாதத்தில் இந்த மசித்த பருப்பைப் போட்டு நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்

 

வியாழன், 27 அக்டோபர், 2022

பொட்டுக்கடலை மாவுருண்டை:-

பொட்டுக்கடலை மாவுருண்டை:-


தேவையானவை:- பொட்டுக்கடலை – 2 கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து நைஸாக சலிக்கவும். சர்க்கரையையும் பொடித்துச் சலிக்கவும். நெய்யை உருக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரைப் பொடி , ஏலப்பொடி, உப்பு கலந்து நெய்யை சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும்.

 

புதன், 26 அக்டோபர், 2022

முந்திரி உருண்டை. :-

முந்திரி உருண்டை. :-


தேவையானவை:- முந்திரி – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலை மாவு – கால் கப், நெய் – கால் கப், சர்க்கரை – அரை கப்

செய்முறை:- முந்திரியை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். பாசிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும். நெய்யில் முதலில் கடலைமாவைப் போட்டு நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை மிதமான தீயில் வறுக்கவும். அதில் பொடித்த முந்திரி, பயத்த மாவு, சர்க்கரைப் பொடி சேர்த்து நன்கு கலக்கி சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.

 

திங்கள், 24 அக்டோபர், 2022

கடலைப்பருப்பு கூட்டு:-

கடலைப்பருப்பு கூட்டு:-


தேவையானவை;- கடலைப்பருப்பு – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தேங்காய்த்துருவல் -1 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- கடலைப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். அரைக் கப் நீரூற்றி குக்கரில் ஒரு விசில் வேகப்போடவும். வெந்ததும் திறந்து பொடியாக அரிந்த வெங்காயம், சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் உப்பு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை பெருங்காயப்பொடி தாளித்துக் கொட்டித் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

 

வியாழன், 20 அக்டோபர், 2022

உக்காரை:-

உக்காரை:-


தேவையானவை:-,பாசிப் பரு‌ப்பு - 1 க‌ப், சீனி  - 1 க‌ப், இடியாப்ப மாவு – 1 டேபிள் ஸ்பூன், தே‌ங்கா‌ய் துருவ‌ல் - 1 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், மு‌ந்‌தி‌ரி – 15, ஏல‌க்கா‌ய் - 2

செ‌ய்முறை:- பாசிப்பருப்பைக் கழுவி வேகப்போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரிலேயே சிறிது நெய்யில் வறுத்த இடியாப்பமாவைப் போடவும். நன்கு கிளறி பருப்பும் மாவும் சேர்ந்து வெந்து வந்ததும் சீனியைப் போடவும். சீனி கரைந்து வரும்போது தேங்காய்த் துருவலும் சேர்க்கவும். நன்கு கிளறி கெட்டியாகும்போது நெய்யில் முந்திரி பொரித்துப் போடவும். ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிளறி இறக்கவும்.

 

புதன், 19 அக்டோபர், 2022

துவரம்பருப்பு சட்னி:-

துவரம்பருப்பு சட்னி:-



தேவையானவை:- வரமிளகாய் – 3, துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், பச்சரிசி - 2 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1/10இஞ்ச் துண்டு, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, புளி - 1 சுளை, உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்,கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- வெறும் பானில் எண்ணெயில்லாமல் வரமிளகாய்., துவரம்பருப்பு., பச்சரிசி., வெந்தயம்., பெருங்காயம் போட்டு வறுத்து பொடிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து எடுத்து உப்பு சேர்க்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயிக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., வெங்காயம் ., தக்காளி., கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். உப்பும் மசாலா பொடியும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து சூடாக இட்லி., தோசையுடன் பரிமாறவும்..

 
Related Posts Plugin for WordPress, Blogger...