எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா.

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா. 


தேவையானவை :- பனீர் - 200 கி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், கசூரி மேத்தி ( காய்ந்த வெந்தயக்கீரை ) - சிறிது, வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், மலாய் ( பாலாடை ) - 1 டேபிள் ஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், உப்பு - அரை டீஸ்பூன், பட்டை, இலை - சிறிது. 

செய்முறை:- பனீரைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். ஒரு பானில் பட்டை இலை அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போடவும். அதையும் சிறிது நேரம் வதக்கி சிவந்ததும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தக்காளி பேஸ்டை போடவும். உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி பனீரைப் போட்டுப் பாலையும் அரை கப் தண்ணீரையும் ஊற்றவும். சிறிது கொதித்ததும் இதில் கசூரி மேத்தி கரம் மசாலா சேர்த்து இன்னும் சில நிமிடம் வேக வைக்கவும். ( தண்ணீர் போதவில்லையென்றால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். ) இறக்கும்போது மலாயையும் வெண்ணெயையும் போட்டு இறக்கி ரொட்டி, நான், சப்பாத்தி, ருமாலி ரொட்டி, குல்ச்சா, ஜீரா ரைஸுடன் பரிமாறவும். 

  

கோதுமை கேப்பை தோசை.

கோதுமை கேப்பை தோசை. 

தேவையானவை:- கோதுமை - 1 கப், கேப்பை - அரை கப், சீரகம் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 1, பெரிய வெங்காயம் - 1, கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிதளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கோதுமையையும் கேப்பையையும் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். இன்னும் கால் கப் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். இதில் சீரகம், பெருங்காய்த்தூள், உப்பைப் போட்டு வைக்கவும். பெரிய வெங்காயம் பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கி நன்கு கலந்து ஐந்து நிமிடம் வைக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவைத்துத் திருப்பிப் போட்டு நன்கு பொன்னிறமானதும் எடுத்து சுண்டைக்காய்த் துவையல், மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும். 

புதன், 29 ஜூலை, 2020

கேப்பை புட்டுக் கொழுக்கட்டை.

கேப்பை புட்டுக் கொழுக்கட்டை. 


தேவையானவை:- கேப்பை  மாவு - 1 கப், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், தூள் சர்க்கரை/தூள் வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன். 

செய்முறை:- கேப்பையை நன்கு சலித்து லேசாக உப்புத்தூவி தண்ணீர் தெளித்துப் பிசறவும். அது பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்கும்படியும் உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுவே பக்குவம். இதை இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுத்து தூள் சர்க்கரை/வெல்லம் தேங்காய், நெய் கலந்து கொழுக்கட்டையாகப் பிடிக்கவும். 
  

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஜவ்வரிசிப் பாயாசம்.

ஜவ்வரிசிப் பாயாசம்.

தேவையானவை:- ஜவ்வரிசி - 150 கி, தேங்காய் - அரை மூடி, ஜீனி - 50 கி, நெய் - 2 டீஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் - தலா 6, ஏலப்பொடி - ஒரு சிட்டிகை. 


செய்முறை:- தேங்காயைத் திருகி மூன்று பால் ( மூன்று அரை கப் ) எடுக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்துக் கொண்டு அதில் ஜவ்வரிசியைப் போட்டுப் பொரிய விடவும். பொரிந்ததும் மூன்றாவது பாலை ஊற்றி வேக விடவும். கொதிவந்ததும் இரண்டாம் பாலையும் சேர்க்கவும். நன்கு கண்ணாடி மாதிரி வெந்ததும் ஜீனியைப் போட்டுக் கொதிக்க விடவும். இறக்கி வைத்து முதல் பாலைச் சேர்த்து ஏலப்பொடி முந்திரி கிஸ்மிஸைச் சேர்த்துப் பரிமாறவும்.  
  

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சிக்கன் சுக்கா - 1.

சிக்கன் சுக்கா - 1. 



தேவையானவை :- சிக்கன் 250 கிராம். மிளகாய் - 10,உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன். 

செய்முறை:- சிக்கனைச் சுத்தம் செய்து வைக்கவும். மிளகாயை மைய அரைக்கவும். ஒரு கடாயில் சிக்கனையும் இந்த மிளகாய் விழுதையும் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மூடி போட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்து சுண்டியதும் உப்பு சேர்க்கவும். இதை இரண்டு விதமாக வறுக்கலாம். இதன் பக்கவாட்டிலேயே எண்ணெய் ஊற்றி நன்கு வறுத்துச் சுக்காக ஆனதும் எடுக்கலாம். 

இன்னொரு முறையில் சிக்கனில் நீர் சுண்டியதும் இறக்கி அதில் ஃபுட் கலரை நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து எடுத்துப் பரிமாறவும். 
  

புதன், 22 ஜூலை, 2020

வெஜ் கொத்துப் பரோட்டா.

வெஜ் கொத்துப் பரோட்டா. 


தேவையானவை :- பரோட்டா -  2, பெரிய வெங்காயம் - 1 , காய்கறிக் கலவை - காரட், பீன்ஸ் , குடைமிளகாய், முட்டைக்கோஸ் - 1 கப், பச்சைமிளகாய் - 2, தக்காளி - சின்னம் - 1, எலுமிச்சைச் சாறு - சில துளிகள், உப்பு - கால் டீஸ்பூன்,மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். கருவேப்பிலை - 1 இணுக்கு. முட்டை - 2 விரும்பினால். 

செய்முறை:- பரோட்டாவைப் பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு பானில் பொடியாக அரிந்த வெங்காயத்தை எண்ணெய் இல்லாமல் சிறிது நேரம் வதக்கவும். இதில் காய்கறிக் கலவையையும் கொட்டி நன்கு பரவ விட்டு வதக்கவும். ஓரிரு நிமிடம் கழித்து இதில் பொடியாக அரிந்த பரோட்டா, உப்பு, பொடியாக அரிந்த பச்சைமிளகாய்,  எண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் தோசைக்கரண்டியால் திருப்பி விட்டுக் கொத்தவும். ( விரும்பினால் முட்டை சேர்க்கலாம் ). ஐந்து நிமிடம் கழிந்ததும் துண்டுகளாக்கிய தக்காளி கருவேப்பிலை சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து நன்கு கலக்கிவிட்டு இறக்கி மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸுடன் பரிமாறவும். இட்ஸ் டிஃபரண்ட் :) 
    

திங்கள், 20 ஜூலை, 2020

சிவப்பு முள்ளங்கி சாம்பார்.

சிவப்பு முள்ளங்கி சாம்பார்.


தேவையானவை:- சிவப்பு முள்ளங்கி - 250 கி, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு, ஒரு சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லித் தழை - சிறிது.

செய்முறை:- சிவப்பு முள்ளங்கியை நன்கு கழுவி வட்டத்துண்டுகளாக்கவும். சின்ன வெங்காயம் தக்காளியை நறுக்கு முள்ளங்கியோடு சேர்த்துப் பருப்பில் போட்டு ஒருதுண்டு பெருங்காயம், மஞ்சள் தூள் கால் கப் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். உப்பு புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி சேர்த்து வைக்கவும். குக்கரைத் திறந்து புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம், பெருங்காயம் கருவேப்பிலை தாளித்துக் கொத்துமல்லி தூவி இறக்கவும். சாதம் தோசை இட்லி  போன்றவற்றோடு பரிமாறவும்.
  

கேப்பைப் புட்டு/ராகிப் புட்டு.

கேப்பைப் புட்டு.

தேவையானவை:- கேப்பை ( ராகி ) மாவு -1 கப் ( வீட்டிலேயே கேப்பையை வாங்கி அலசி ஊறவைத்து நீர் வடித்து மிக்ஸியில் திரித்து சலித்துக் கொள்ளலாம். இது இன்னும் சுவையாக இருக்கும். ), உப்பு - 1சிட்டிகை, சீனி  அல்லது வெல்லம் - கால் கப், தேங்காய்த்துருவல் - கால்கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கேப்பையை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவும். கால் கப் தண்ணீர் போதுமானது. ஒன்று சேர்ந்து பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிரவேண்டும் . இதுவே பக்குவம். ஒரு சல்லடையில் இம்மாவைச் சலித்து இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் பத்து நிமிடம் வேகவிடவும். ஒரு பௌலில் சீனி நெய், தேங்காய் போட்டுக் கலந்து வைக்கவும். சூடாகப் புட்டை உதிர்த்துக்கொட்டிக் கலந்து பரிமாறவும். மிகவும் ருசியான & சத்தான புட்டு இது.
  

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கீமா பராத்தா.

கீமா பராத்தா.

தேவையானவை:- கோதுமை மாவு - 1 கப், மட்டன் கைமா - 150 கி, பெரிய வெங்காயம் - 1, மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், வெந்த கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன். தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 50 கிராம். தாளிக்க பட்டை கிராம்பு, ஏலக்காய் - தலா 1, சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- குக்கரில் மட்டன் கைமாவை கால் கப் தண்ணீர் விட்டு மூன்று நான்கு விசில் நன்கு வேகவிடவும். ஒரு பானில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு மிளகாய்த்தூள், மல்லித்தூள் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி வெந்த கைமாவைப் போடவும். நன்கு சுருள வெந்ததும் வெந்த கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவலைச் சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெயைச் சேர்த்துப் பிசைந்து பத்துநிமிடம் ஊறவிடவும். பின் சப்பாத்தி போல் உருண்டைகள் செய்து அதில் கைமா மசாலாவை உருட்டி வைத்து மூடி கனமான சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வெந்ததும் சூடாக எடுத்து அச்சார் ( ஊறுகாய்) தயிர் ஆகியவற்றுடன் பரிமாறவும்.
  

சனி, 18 ஜூலை, 2020

முட்டைப் பரோட்டா.

முட்டை பரோட்டா:-

தேவையானவை:- முட்டை - 2. பரோட்டா - 1.பெரிய வெங்காயம் - 1. உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகு சீரகத்தூள் - கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2. மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், தக்காளி -பாதி. கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை. பரோட்டாவை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். தக்காளியைத் துண்டுகள் செய்து கொள்ளவும். ஒரு கனமான இருப்புச்சட்டியைக் காயவைத்து அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். ( எண்ணெய் ஊற்ற வேண்டாம். ) அதன் ஈரப்பசை லேசாகப் போனதும் அதில் பொடியாக அரிந்த பரோட்டாவைப் போட்டுப் புரட்டவும். நன்கு கலந்ததும் அதில் பச்சை மிளகாய் , உப்பு, எண்ணெய் , மிளகாய்ப் பொடியைப் போட்டு அதன் மேலேயே இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றவும்.

பரோட்டாவைக் கொத்த தோசைக்கரண்டியைப் பயன்படுத்தவும். இனி தோசைக் கரண்டியைப் பிடித்து முட்டையைப் பிரட்டிப் போட்டு, பரோட்டா வெங்காயத்தைக் கலந்து விட்டு கொத்திக் கொத்திக் கிண்டவும். ஐந்து நிமிடம் கடையில் கிண்டுவதுபோல் கொத்திக் கிண்டி முட்டை வெந்ததும் அதில் தக்காளி மிளகாய்ப்பொடி கருவேப்பிலை போட்டு நன்கு புரட்டி இறக்கி சூடாக குருமாவோடு பரிமாறவும். 
  
Related Posts Plugin for WordPress, Blogger...