எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 டிசம்பர், 2021

கொத்துமல்லி தேங்காய் சம்மந்தி

கொத்துமல்லி தேங்காய் சம்மந்தி:-



தேவையானவை :- மல்லி - 1 கட்டு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் - கால் மூடி, சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல், புளி - 1 சுளை, உப்பு - கால் தேக்கரண்டி, பெருங்காயம் - 1 துண்டு.

செய்முறை:- மல்லியை சுத்தம் செய்து நன்கு அலசி பொடியாக நறுக்கவும் ( இல்லாவிட்டால் மிக்ஸியில் மாட்டிக் கொள்ளும் ) . வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும்.  பச்சை மிளகாய் வெங்காயம் வெள்ளைப்பூண்டு, உப்பு, புளி பெருங்காயத்தை மிக்சியில் சிறிது அரைத்துக் கொண்டு அதன் பின் தேங்காயைச் சேர்த்து அரைத்து அதன் பின் மல்லியை மிக்சி கொள்ளும் வரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுக்கவும். சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். சாதத்தில் நெய் விட்டு இத்துவையலைப் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளவும் அருமையாக இருக்கும். 
 

புதன், 22 டிசம்பர், 2021

காரட் தக்காளி சூப்

காரட் தக்காளி சூப்


தேவையானவை:- காரட் - 1, தக்காளி - 2, பெரிய வெங்காயம் - 1, உப்பு - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், வெண்ணெய்  அல்லது க்ரீம் - ஒரு டீஸ்பூன் விரும்பினால்

செய்முறை:- காரட், வெங்காயத்தைத் தோலுரித்துத் துண்டுகள் செய்து தக்காளியுடன் குக்கரில் இரண்டு கப் நீரூற்றி வேகப்போடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் நீரில்லாமல் எடுத்து மிக்ஸியில் போட்டு மசிக்கவும். திரும்ப அதே நீரில் அரைத்ததை வழித்து ஊற்றிக் கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி உப்பு, மிளகுத்தூள்,  வெண்ணெய் சேர்த்துக் கலந்து அருந்தக் கொடுக்கவும். 


 

சோளா பூரி

சோளா பூரி :-



தேவையானவை:- மைதா மாவு - அரை கப், வெள்ளை ரவை - அரை கப், ஆட்டா ( கோதுமை மாவு) - அரை கப், உப்பு - 1/2 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:- ரவை, மைதா, கோதுமை மாவுகளை ஒரு பௌலில் போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் நீர் விட்டு மென்மையாகப் பிசையவும். பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து பூரிகளாகத் தேய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். சன்னா மசால் ( கறுப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக்கடலை மசாலாவுடன் )  , வெங்காயத்துடன் பரிமாறவும். 
 

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

பரங்கிக்காய் புளிக்கறி

பரங்கிக்காய் புளிக்கறி:---


தேவையானவை :-
பரங்கிக்காய் – 1 கீத்து, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப் பூண்டு – 4, வரமிளகாய் – 4, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து -  1 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, வெல்லம் – சிறு துண்டு.

செய்முறை:- பரங்கிக்காயை விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டை உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். புளியை உப்புப் போட்டு அரைகப் தண்ணீரில் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் வெள்ளைப் பூண்டைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கியதும் பரங்கிக்காயைக் கழுவிச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கி சாம்பார் பொடி போட்டு புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். நன்கு கிளறி விட்டுக் கொதி வந்ததும் அடக்கி வைத்து மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் வேக விடவும். வெந்ததும் இறக்குமுன் வெல்லம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

 

புதன், 15 டிசம்பர், 2021

தினை பாசிப்பருப்புப் பாயாசம்

தினை பாசிப்பருப்புப் பாயாசம்.


தேவையானவை :- பாசிப்பருப்பு – 1 கப், தினை - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பால் 2 கப். சர்க்கரை – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.

செய்முறை :- பாசிப்பருப்பைக் குக்கரில்  பதமாக வேகவைத்து இறக்கவும்.தினையைக் குழைய வேகவைத்து இறக்கவும். இரண்டையும் மசித்து இரண்டு கப் பால் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும்போது சீனி சேர்த்து கரைந்ததும் இறக்கவும். ஒரு வாணலியில் நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸைப் பொரித்தெடுக்கவும்.  இதில் ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸ் தேங்காய்த் துருவல் கலந்து நிவேதிக்கவும். 

 

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கம்பு கேப்பை பூரி

கம்பு கேப்பை பூரி


தேவையானவை:- கம்பு மாவு - அரை கப், கேப்பை  மாவு ( ராகி ) - அரை கப், ஆட்டா ( கோதுமை மாவு) - அரை கப், உப்பு - 1/2 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:- கம்பு , கேப்பை, ஆட்டா மாவுகளை ஒரு பௌலில் போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் நீர் விட்டு மென்மையாகப் பிசையவும். எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து பூரிகளாகத் தேய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். உருளை மசால், தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும். 

வியாழன், 9 டிசம்பர், 2021

20.ரோஜாப்பூ வனிலா பாயாசம்

20.ரோஜாப்பூ வனிலா பாயாசம்

 


தேவையானவை:- ரோஜாப்பூ – 4, பால் – ஒரு லிட்டர், கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள் ஸ்பூன், சீனி – 2 டேபிள் ஸ்பூன், வனிலா எஸன்ஸ் – சில துளிகள், ரோஸ் கலர் –சில துளிகள். பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 4 நெய்யில் வறுத்துப் பெரிய துண்டுகளாகப் பொடிக்கவும்.

 

செய்முறை:- ரோஜாப்பூவை உதிர்த்து வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி சிறிது எடுத்து ஆறவிடவும். மீதிப்பாலில் கார்ன்ஃப்ளோரையும் சீனியையும் போட்டுப் பாதியாகும் அளவு காய்ச்சி ஆறவைக்கவும். முன்பு எடுத்த வைத்த பால் ஆறியதும் ரோஜா இதழ்களைப் போட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதை கார்ன்ஃப்ளோர் சீனி போட்டுக் காய்ச்சிய பாலில் ஊற்றி வனிலா எஸன்ஸ், ரோஸ் கலர் சேர்த்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குளிர்விக்கவும். வறுத்த பாதாம் பிஸ்தா முந்திரித் துண்டுகளைப் பரிமாறும்போது கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி மேலாகத் தூவிக் கொடுக்கவும். 

 

 

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

19.கோபி பரோட்டா

19.கோபி பரோட்டா

 


தேவையானவை:- கோதுமை மாவு - 2 கப்,உப்பு - 1/2 டீஸ்பூன், வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர், எண்ணெய் போதுமான அளவு, காலிஃப்ளவர் – 6 பூ ( பொடியாக அரிந்தது), பெரிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது., வரமிளகாய்த் தூள் - 1/3 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

 

செய்முறை:- கோதுமைமாவுடன் வெண்ணெய்/நெய் & உப்பைக் கலக்கவும் தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசையவும். ஒரு ஈரத்துணியில் மூடி ஊறவைக்கவும். பொடியாக அரிந்த காலிஃப்ளவருடன் பொடியாக அரிந்த வெங்காயம், மிளகாய்ப் பொடி, கரம் மசாலாப் பொடியை சேர்க்கவும். மாவை 12 சம உருண்டகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் ஒரு டீஸ்பூன் காலிஃப்ளவர் கலவையை வைத்து உருட்டவும். மாவில் புரட்டி கனமான பரோட்டாக்களாகச் செய்து எண்ணெய் அல்லது நெய்யில் சுட்டெடுத்து மூங்தால் சப்ஜி (பாசிப்பயறு) யுடன் பரிமாறவும்.

 

புதன், 1 டிசம்பர், 2021

18.ஆலு கோபி

18.ஆலு கோபி


 

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, காலிஃப்ளவர் - 1 சிறியது, எண்ணெய் - 3 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் + ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன்.

 

 

செய்முறை:- உருளையை தோலுரித்து கழுவி விரல் அளவு துண்டுகளாக்கவும். காலிஃப்ளவரை பூக்களாய்ப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். தண்ணீரை வடித்து பூக்களை தனியாக வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போடவும். பொறிந்ததும் உருளை , காலிஃப்ளவரைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சீரகப்பொடி., மிளகாய்ப்பொடி., கரம் மசாலா பொடி., ஆம்சூர் பொடி., உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வேகவைத்து சூடாக சப்பாத்தி., ரொட்டி., நான்., குல்ச்சாக்களுடன் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...