எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 டிசம்பர், 2014

புதன் முதல் சனி வரை நிவேதனங்கள் WEDNESDAY, THURSDAY, FRIDAY, SATURDAY RECIPES

4. கிருஷ்ணப் ப்ரசாதம். – புதன் பெருமாள்

இது இஸ்கான் கோயிலில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட சுருள் பூரி டைப் இனிப்பு. ஆனால் நீள அப்பளப்பூவை மடித்து ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியது போலச் செய்வது.



தேவையானவை:-

மைதா – 2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை ( விரும்பினால் )
சர்க்கரை – 1 கப்
உப்பு -  1 சிட்டிகை.
ஆரஞ்ச் புட் கலர் – 1 சிட்டிகை.
எண்ணெய் –தேவையான அளவு

செய்முறை:-

மைதாவை ஒரு பவுலில் போட்டு உப்பு, புட்கலர், பேக்கிங் சோடாவுடன் நன்கு கலந்து நெய்யை உருக்கி ஊற்றி லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து எண்ணெயில் ஊறவிடவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும்.

இரண்டு மணி நேரம் ஊறியதும். சின்னச் சின்ன அப்பள உருண்டைகள் ( நெல்லிக்காய் அளவு எடுத்து ) போல எடுத்து நீளவாக்கில் மட்டும் தேய்க்கவும். நாலு ஐந்தை அதுபோல தேய்த்து ஒன்றின் மேல் ஒன்றை லேசாக நெய் தடவி மாவு தூவி அடுக்கி இன்னும் ஒரு முறை லேசாகத் தேய்த்து ( 4 , 5 நீள அப்பளப்பூவை ஒட்டினாற்போல ) எண்ணெயில் நன்கு பொறித்து எடுக்கவும்.

சூடாக இருக்கும் போதே பொடித்த சர்க்கரையில் புரட்டி அடுக்கவும். நிவேதனம் செய்யவும். எண்ணெய்க்குப் பதில் நெய் அல்லது டால்டாவிலும் பொறிக்கலாம்.


5.கடலைப் பருப்பு பாயாசம். –வியாழன் மகான் ராகவேந்திரர் .

தேவையானவை :-

கடலைப்பருப்பு – 1 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 2 அச்சு
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
கிஸ்மிஸ் – 10
ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை.



செய்முறை:-

கடலைப் பருப்பைக்கழுவி குக்கரில் வேகப் போடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி லேசாக மசிக்கவும். அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்து கொதித்ததும் இறக்கவும். தேங்காயைத் துருவி 1 கப் பால் எடுக்கவும். பாயாசம் வெதுவெதுப்பாக இருக்கும்போது தேங்காய்ப் பால் சேர்த்து ஏலப்பொடி போட்டு நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொறித்துப் போடவும். ராகவேந்திரருக்கு நிவேதனம் செய்யவும். இந்தப் பாயாசத்தை 2 மணி நேரத்தில் உபயோகித்து விடவும். தேங்காய்ப்பால் சேர்க்காமல் தண்ணீரும் பாலும் சேர்த்தால் இரவு வரை உபயோகிக்கலாம்.  


6.மூங்க்தால் கிச்சடி – வெள்ளி அம்மன்

இது டெல்லியின் ஜண்டேவாலிமா மந்திர் என்ற கோயிலில் பிரதி வெள்ளிதோறும் ஆரத்திக்குப் பின் கொடுக்கப்படும் ப்ரசாதமாகும்.

தேவையானவை:-

பச்சரிசி – 1 கப்
உடைத்த பாசிப்பயறு ( மூங்க்தால் ) – ½ கப்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்.
ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய் பொடி – தேவைப்பட்டால் )
உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்.
உப்பு – 1 டீஸ்பூன்

தாளிக்க :-
நெய் – 2 டீஸ்பூன்
ஜீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:-
பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.

ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போட்டு நிவேதனம் செய்யவும்.

7.பழ அப்பம் – சனி விநாயகர்.

தேவையானவை :-
கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை – 1 டேபிள் ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் – 1
(விரும்பினால் ஒரு துண்டு மாம்பழம், ஒரு சுளை பலாப்பழம் ஒரு பேரீச்சை மூன்றையும் அரை வாழைப்பழத்தோடு நன்கு அரைத்துச் சேர்க்கலாம். )
ஜீனி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலப்பொடி – 1 சிட்டிகை.
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-

ஒரு பேசினில் ரவை மைதா கோதுமையைக் கலந்து அதில் உப்பு, ஜீனி, ஏலப்பொடி போடவும். வாழைப்பழத்தை நன்கு சேர்த்துப் பிசைந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு லேசாகத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். 5 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெயை சுடவைத்து மாவைக் கரண்டியால் நன்கு கலக்கி அடித்து ஊற்றி திருப்பி விட்டு எடுக்கவும். சரியான பக்குவம் இருந்தால் ஓரங்கள் நெளி நெளியாக அழகாக உப்பி வரும். இதில் பத்து அப்பங்கள் வரும். நிவேதனம் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...