எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 செப்டம்பர், 2014

அவள் விகடனில் பொங்கப் பானையும் கொப்பி கொட்டுதலும்.PONGAL AT AVAL VIKATAN

பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-

திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.

பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு சாமி வீட்டில் அம்மா நடுவீட்டுக் கோலமிடுவார்கள். அன்று மாலை பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், ஏலக்காய், கிஸ்மிஸு, கத்திரிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய், அவரைக்காய், பலாக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, கரும்புக்கட்டு, மஞ்சக் கொத்து , வாழை இலை வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் எல்லாம் எடுத்து எங்கள் ஆயா வீட்டு ஐயாவும் மாமாக்களும் வருவார்கள்.

பொதுவாக பொங்கல் பானை விளக்கு வைத்தபின் கொடுப்பதில்லை என்பதால் அது ஒரு மாலைப் பொழுதிலேயே பொங்கல் பானை எடுத்து வருவார்கள். அம்மா சாமி வீட்டில் விளக்கேற்ற நடுவீட்டுக் கோலத்தின் முன்பு கொண்டுவந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை வைத்து ஐயாவும், மாமாக்களும் வணங்கி வருவார்கள்.

பொங்கல் பானை கொண்டு வந்தவர்களுக்குச் சிறப்பான மாலைப் பலகாரத்தை அம்மா செய்திருப்பார்கள். கந்தரப்பம், வடை, காரட் அல்வா, பாதாம் அல்வா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், வறுத்த முந்திரிப் பருப்பு, மிக்ஸர் இதில் இனிப்பு ஒன்றும் காரம் ஒன்றும் அத்துடன் இட்லி, தோசை அல்லது மினி ஊத்தப்பம். வெங்காயக் கோஸ்/அவியல்/கோசமல்லி இவற்றோடு இருக்கும்.

பொங்கலுக்கு முதல்நாள் திரும்ப சாமி வீடு மெழுகி அம்மா நடுவீட்டுக் கோலம் போடுவார்கள். பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கரைத்து காட்டன் துணியில் தொட்டு இந்தக் கோலத்தைப் போடுவோம். சாமிவீட்டின் வாசல்படிகளில் கோலமிட்டு சாமிவீட்டுக்கு நேரே வெளிப்பத்தியில் அல்லது கீழ் வாசலில் கிழக்கே சூரியன் உதிக்கும் திசை பார்த்துப் பொங்கலிடக் கோலம் போடுவோம். இதில் செவ்வகக் கோலத்துள் அடுப்பு வைக்க மனைகள் போட்டு தேர்க் கோபுரம்  மற்றும் கால்கள் போட்டு இரட்டை வரிசைப் புள்ளிகள் குத்துவோம். முதலில் கோலம் போட்டுப் பழகுபவர்களுக்குப் புள்ளி வைக்கத்தான் கற்றுக் கொடுப்பார்கள்.



ஒரு வீட்டுப் பொங்கல்  என்றால் நாலு பக்கமும் ஒவ்வொரு தேர்க்கோபுரமும் நடுவில் இரண்டு அடுப்பு மனைகளும் வைப்பதுபோலக் கோலம் இடப்படும். கூடுதலாக அவர்கள் மகன்கள் வீட்டுக்கும் பொங்கலிடுவது என்றால் பக்க வாட்டில் ஒரு தேர்க்கோபுரமும் நீளத்தில்  மகன்கள் வீடுகளுக்கும் சேர்த்துக் கோபுரங்களும் வரையப்படும்.  அதன்பின் பொங்கல்  பானைகளுக்குக் ( முறித்தவலைகள் கல்யாண சீராக வைக்கப்பட்டிருக்கும்-- நல்ல கனமான பித்தளை உருளி ) கோலமிடுவோம்.

ஒரு குச்சியில் பஞ்சைச் சுற்றிக் கோலமாவைத் திக்காகக் கரைத்துத் தொட்டுக் கோலமிடுவோம். அதைச் சுற்றி மஞ்சள், நாமக்கட்டி உரைத்த கலவையிலிருந்து தொட்டுப் புள்ளிகளும் மற்ற டிசைன்களும் வரைவோம். சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு தவலையும் மற்றபடி குடும்பத்துக்கு ஒரு வெள்ளைப்பொங்கல் பானையும் வைப்பதுண்டு.

விளக்குச்சட்டி என்பது ரொம்ப விசேஷம். இது ஒரு சட்டியும் மூடியும் கொண்டது. இதனுள்ளும் வெளியேயும் மயில், சங்கு, சக்கரம், பறவைகள் என விதம்விதமாகக் கோலங்கள் போடுவோம். அதில் ஒரு பிள்ளையாரும் இரண்டு மாட  விளக்குகளும் இருக்கும்.

அடுப்பு மனையிலும், இரும்பு அடுப்புக்களிலும், பொங்கல் இறக்கி வைக்கும் கலவடையிலும் கோலம் போட்டபின் பொங்கல் தவலைகளில் மஞ்சள் கொத்தைக் கட்டி வைப்போம் . கலவடை இறக்கி வைக்கும் இடத்திலும் விளக்குச் சட்டி வைக்கும் சாமி வீட்டிலும் கோலம் போடுவோம். அரிசி புடைக்கும் முறத்தையும் குப்புறத் திருப்பிக் கோலமிட்டு வைப்போம்.

ஆற்று மணலைப் பொங்கலிடும் கோலத்தில் கொட்டிப் பரப்பி அடுப்பு மனைகளை அடுக்கி வைத்து அதன் மேல் கோலமிட்ட இரும்பு அடுப்புக்களை வைத்து சிரட்டைத் தூள், கொட்டான்கள்,  அரிசி , பருப்பு வகைகளைத் தயார் செய்து வைப்போம். விளக்குச் சட்டியிலும் சாமி வீட்டின் உள் வீடு வெளிவீட்டின் வாசல்படிகளிலும் ஒவ்வொரு கணு கரும்பு, பனங்கிழங்கு, கத்திரிக்காய், அவரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு , வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்துவிட்டுத்தான் தூங்கப் போவோம்.

பஞ்சாங்கத்தில் குறித்தபடி கோயில்களில் பொங்கலிட நேரம் குறித்திருப்பார்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் பிள்ளையார் கோயிலில் சோலை அக்கா அல்லது லெட்சுமி அக்கா ஒரு கூடையில் பொங்கலிட தவலை, தண்ணீர் ,சிரட்டைத் தூள், பொங்கலிடத் தேவையான அரிசி பருப்பு வெல்லம் எல்லாம் எடுத்துச் சென்று பொங்கலிட்டு சாமிக்குப் படைத்து வணங்கி வருவார்கள்.

அதன் பின் சிலருக்கு சாமி வீடு என்று இருக்கும். எங்கள் அம்மா வீட்டுக்கு அக்கினியாத்தாள் வீடு என்று ஒரு சாமி வீடு இருக்கிறது. அங்கே சென்று பங்காளிகள் அனைவரும் கூடி அந்த வருடத்துக்குச் சீட்டுப் போட்டுப் பார்த்ததில் யார் வீட்டுக்குப் பொங்கல் விழுந்திருக்கிறதோ அவர்கள் பொங்கலிட அனைவரும் கூடி உதவி செய்து பொங்கலிட்டுக் கரும்பு வெட்டி அக்கினியாத்தாளுக்குப் படைத்தபின் வீட்டில் வந்து பொங்கல் இடுவார்கள்.

அதன் முன் அடுப்படியில் கத்திரிக்காய் குழம்பு, பரங்கிக்காய் குழம்பு, கருணைக்கிழங்குக் குழம்பு வைத்துப் பருப்பு மசித்து அப்பளம் பொறித்து வைப்பார்கள்.  அவரைக்காய்ப் பொரியல், சர்க்கரை வள்ளிக்கிழங்குப் பொரியல், கீரை மசியல், தட்டப் பயித்தங்காய்ப் பொரியல், வாழைக்காய் புளிப் பொரியல், பலாக்காய்க் கூட்டு அனைத்தும் செய்து வைத்திருப்பார்கள் .

சாமி வீட்டின் முன்பு பொங்கல் அடுப்புக்களை சிரட்டைத்தூள் விறகு கொண்டு பற்றவைப்போம்.  பொங்கல் தவலைகளைப் பிடித்து அதனுள் ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பாலை ஊற்றி அடுப்பை மூன்று தரம் ஆலத்தி சுற்றி  சங்கு ஊதி அடுப்பில் வைப்போம். முன்பே அரிசி பருப்பைக் களைந்து தண்ணீரை வடிகட்டி கொண்டு வடித்து வைத்திருப்போம். களைந்த அரிசியைக்கொட்டான்களில் வடிய வைத்திருப்போம். அந்தத் தண்ணீரை ஊற்றி பொங்கல் அடுப்பை நன்கு எரிய விட்டால் பால் பொங்கி வரும்.

எல்லாரும் ”பொங்கலோ பொங்கலெ”ன்று சொல்லித் திரும்ப சங்கு ஊதி அதில் அரிசி போடுவோம்.  அகப்பைக் கரண்டியால் பொங்கலைக் கிண்டி வெண்பொங்கலென்றால் அப்படியே சமைத்து கும்பிட்டு இறக்கிக்   கலவடையில் வைப்போம். சர்க்கரைப் பொங்கலென்றால் சோறும் பருப்பும் குழைந்ததும் நன்கு மசித்து நச்சு வைத்த வெல்லத்தைப் போட்டுக் கரைத்ததும், நெய்யில் முந்திரி , திராஷை பொரித்துப் போட்டுக் கும்பிட்டு இறக்கிக் கலவடையில் வைப்போம்.

பால் பொங்கியதும் கரும்பைக் கணுக்கணுவாக வெட்டித் தோல் சீவித் துண்டங்களாக்கித் தருவார்கள்.

சாமி வீட்டில் நெய் விளக்கேற்றி  விளக்குச் சட்டியிலும் நெய் விளக்கேற்றுவார்கள். அடுப்பின் முன் சூரியனுக்கு நேராக வாழையிலைகளைப் போட்டு பள்ளயம் போடுவது போல நடுவில் வெள்ளைப் பொங்கலும், அதன் இருபக்கமும் சர்க்கரைப் பொங்கலும் வைத்து சதுரமாகச் செய்து வைப்பார்கள். அதன் நடுவில் பருப்பும் நெய்யும் விட்டு சுற்றிலும் சமைத்த குழம்பு காய்கறிகளைப் படைத்துத் தேங்காய் உடைத்து விளக்குச் சட்டியிலும் படையல் முன்பும் வைத்துத் தீப தூப ஆராதனை செய்வார்கள்.

எங்கள் ஐயா முதலில் வணங்க, அதன்பின் அப்பா ,அம்மா, சித்தப்பாக்கள், நான், என் தம்பிகள் அனைவரும் விழுந்து வணங்குவோம். பின்பு முறத்தை எடுத்துவந்து அதன் பின் புறத்தில் வாழை இலையைப் படையலோடு வைத்து அதில் விளக்குச் சட்டியில் இருக்கும் இரண்டு விளக்குகளையும் வைத்து இருவர் இருவராக கணவன் மனைவி எடுத்துச் சென்று சாமி வீட்டில் வைத்து வணங்கி வருவோம். இந்த சமயம்  ஆண்கள் தலைப்பாகை கட்டிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் சாமி கும்பிடும்போதும் வாழை இலையை சாமி வீட்டில் வைக்கும் போதும் சங்கு ஊதுவோம்.

பின்பு அந்தப் படைத்த இலைகளை எடுத்து வந்து பெரியவர்கள், ஆண்மக்கள் உணவு உண்பார்கள். அதன் பின் பெண்களும், வேலை செய்பவர்களும் உண்பார்கள். இதில் மிஞ்சும் பொங்கலை உருண்டைகளாக உருட்டி நீரில் போட்டு வைப்பார்கள். இரவில் இந்தச் சோற்று உருண்டைகளைக் கூட்டுக் குழம்போடு சாப்பிடுவோம். மதிய உணவுக்குப் பின் மிச்சமாகும் குழம்பு, கூட்டு , மசியல், பொரியல், ரசம், பருப்பு அனைத்தையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்குவோம். இதற்குக் கூட்டுக் குழம்பு என்று பெயர். மிகுந்த ருசியாக இருக்கும். பொங்கல் முடிந்து இரண்டு நாளைக்கு இதே குழம்பே இருக்கும்.

மாட்டுப் பொங்கலன்று திரும்ப இதே படி கோலங்கள் இட்டு வெள்ளைப் பொங்கல் வைத்து பரங்கிக்காய்க் குழம்பு வைத்து மஞ்சள் இலையில் பொங்கல் வெல்லம் நெய் , பரங்கிக்காய் வைத்துப் படைப்போம்.  அதை மாட்டுக்குக் கொண்டு கொடுப்போம். மாட்டுக்குக் குளிப்பாட்டி கொம்பில் துணி சுற்றி மாலைபோட்டுப் பொட்டு வைத்துத் தீபம் காட்டி இந்தப் பொங்கல் சோற்றையும் வாழைப்பழங்களையும் உண்ணக் கொடுப்போம்.

புதிதாய்ப்பெண் குழந்தைகள் பிறந்த வீடுகளில் கொப்பி கொட்டுதல் விசேஷம். அந்த பெண் குழந்தையை நன்கு அலங்கரித்து கொப்பிப் பொட்டலுக்கு மாட்டுப் பொங்கலன்று தூக்கிச் செல்வார்கள். வெள்ளியில் கொப்பி கொட்டுதல் என்று ஒரு சாமான் செய்து வைத்திருப்பார்கள். அதையும் வீட்டில் வாசல்படிகளில் , விளக்குச் சட்டிகளில் வைத்த காய்கறிகளையும் மேலும் அரிசி, வெல்லம் பருப்பு முதலான பொருட்களையும் எடுத்துச் சென்று கொப்பிப் பொட்டலில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று வணங்குவார்கள். அதன் பின் அங்கே அமர்ந்து இருக்கும்  மக்களின் கொட்டான்களில் இந்தக் காய்கறிகளையும் பருப்பு வெல்லம் முதலான பொருட்களையும் கொட்டுவார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அனைவருக்கும் தனக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து உண்ணவேண்டும் என்பதைக் கற்பிக்கவே கொப்பி கொட்டுதல் நடைபெறுகிறது.

வெளியூர்களில் இப்போது பொங்கல் சீருக்குப் பதிலாக மணி ஆர்டரில் அல்லது வங்கிக் கணக்குகளில் 51 அல்லது 501 ரூபாயை அனுப்புகிறார்கள்.

கரும்பு, வெற்றிலை, பாக்கு, மற்ற காய்கறிகள்  கிடைத்தவற்றைக் கொண்டு பொங்கலிடுகிறோம்.

மேலும் அடுப்பு மேடையில் கோலமிட்டுப் பொங்கல் காஸ் அடுப்பில் வைக்கிறோம். ஆனால் குக்கரில் வைக்காமல் பால் பொங்கி வழிய வேண்டுமென்பதற்காக முறித்தவலைகளில்தான் வைக்கிறோம்.

பொங்கலன்று மாலை தாய் வீடு சென்று பெண் மக்கள் “ எங்களுக்குப் பால் பொங்கிச்சு  உங்களுக்குப் பால் பொங்கிச்சா ” என்று கேட்பார்கள். அதற்குப் பெற்றவர்கள் ” எங்களுக்கு நல்லாப் பொங்குச்சு ஆத்தா “ என்று சொல்லி மகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும்  பணம் கொடுப்பார்கள். இப்போது ஃபோனிலேயே விசாரித்து விடுகிறோம். இது ஆத்தா வீட்டில் பெண் மக்களுக்கு உள்ள உரிமையையும் அன்பையும் பாசத்தையும் நினைவு கூர்வதாகவும் நிலைநாட்டுவதாகவே இருக்கிறது.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை அவள் விகடனில் வெளிவந்தது. இந்த இணைப்பிலும் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...