எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 அக்டோபர், 2014

தீபாவளி சிறப்பு நிவேதனங்கள். DIWALI SPECIAL RECIPES.



1.சந்த்ரகலா சூர்யகலா:-
தேவையானவை:-
மைதா – 2 கப்
பால் கோவா – 2 கப்
சீனி – 2 கப்
முந்திரி – 20
திராக்ஷை – 20
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 4
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.


செய்முறை:-

பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராக்ஷை பொறித்துப் போட்டு ஏலப்பொடியும் போட்டு பிசைந்து கொள்ளவும். மிச்ச நெய்யை உருக்கி ஊற்றி அதில் மைதாவைப் போட்டு சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து ஊறவைக்கவும்.

மைதாவை சின்ன பூரிகளாகத் திரட்டி அதில் கோவா பூரணம் வைத்து சோமாஸ் போல் விளிம்பு மடித்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். சீனியில் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கம்பிப்பாகு காய்ச்சவும். சோமாஸ்களை சர்க்கரைப் பாகில் போட்டு சில நிமிடங்களில் எடுத்துத் தட்டில் வைக்கவும். இதுவே சந்திரகலா. 

2. முந்திரி பாதாம் பிஸ்தா ரோல். :-

தேவையானவை:-
முந்திரி – 100 கி
பாதாம் – 100 கி
பிஸ்தா – 100 கி
பொடித்த சீனி – 300 கி
கேசரி கலர் – 1 சிட்டிகை
பச்சைக் கலர் – 1 சிட்டிகை
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
முந்திரி பாதாம் பிஸ்தாவை நன்கு காயவைத்துத் தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும்.

சீனியைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி அதில் தனித்தனியாக பாதாம் பிஸ்தா முந்திரி போட்டுக் கிளறவும். பாதாமில் கேசரி கலரையும் பிஸ்தாவில் பச்சைக்கலரையும் சேர்க்கவும்.  சுருண்டதும் இறக்கி நெய் தடவிய சப்பாத்திப் பலகையில் போட்டு மெல்லிசாக தனித்தனியாக செவ்வக வடிவில் திரட்டவும்.

மூன்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து மெல்லிசா ரோல் செய்து சுருட்டவும். ரோலை குறுக்கு வாட்டில் வெட்டிப் பரிமாறவும். மூன்று வண்ணங்களில் அழகான ட்ரைகலர் நட்ஸ் ரோல் தயார்.

3.மால்புவா:-
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு – 2 கப்
பன்னீர் – 2 கப்
நெய் – 2 கப்
பால் – 4 கப்
சீனி – 2 கப்
ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள்.
பாதாம் பிஸ்தா – ஊறவைத்து நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
பாலைக்காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பன்னீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப் பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

சீனி அரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகு வைத்து இறக்கவும். ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

நெய்யைக் காயவைத்து கரைத்த மாவை அப்பம் போல ஊற்றி எடுத்து இன்னொரு ஜாரிணியால் அமுக்கிப் பிடித்து நெய்யைப் பிடிந்து ஜீராவில் போடவும். அதில் சில நிமிடங்கள் ஊறியபின் ஜீராவையும் ஜாரிணியால் வடித்து மால்புவாக்களை எடுத்து அடுக்கவும். இதன் மேல் பாதாம் பிஸ்தா தூவி பரிமாறவும். ராப்ரி ஊற்றியும் பரிமாறலாம்.

4. மோகன்தால் :-

தேவையானவை:-
கடலை மாவு – 2 கப்
நெய் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
சீனி – 2 கப்
பால் – ½ கப்
பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்த் தூளைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் பால் ஊற்றி நன்கு பிசைந்து வைக்கவும். நெய்யை ஒரு பானில் காயவைத்து இந்த மாவுக்கலவையைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.

சீனியில் தண்ணீர் சேர்த்துப் கம்பிப்பாகு காய்ச்சவும். நெய்யில் வறுத்த மாவைத் தூவிக் கிளறிவிடவும். நன்கு கிளறி சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகத் தட்டி சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தாவைத் தூவி சதுரமாகத் துண்டுகள் வெட்டி ஆறவிடவும். 4 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்தவும்.

5. காலா ஜாமூன்:-

தேவையானவை :-
கோவா ( சீனியில்லாதது ) 200 கி
பன்னீர் – 100 கி
சீனி – 300 கி
மைதா – 2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை ஏலக்காய்த் தூள் –  1 சிட்டிகை
நெய்/எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
கோவாவையும் பனீரையும் சன்னமாகத் துருவவும். அதில் மைதா சோளாமாவைச் சலித்துப் போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும். இதில் 30 ஜாமூன்கள் உருட்டலாம். உள்ளங்கையில் வைத்து நிரடல், வெடிப்பு  இல்லாமல் பிசைந்து மென்மையாக உருட்டி வைக்கவும்.

சீனியில் கால் கப் தண்ணீர் ஊற்றி திக் பாகு காய்ச்சவும். பாகில் பால் ஊற்றினால் அழுக்கு தூசி எல்லாம் மேலேழும்பி வரும் அதை வடிகட்டி விட்டு திரும்பக் காய்ச்சி ஏலக்காயைப் போட்டு வைக்கவும்.

நெய்/எண்ணெயைக் சூடுபடுத்தி ஜாமூன்களை மிதமாத தீயில் ப்ரவுன் அல்லது கறுப்பாகும் வரை பொரிக்கவும். ஜாமூனில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும்.

6. ஆலு புஜியா:-

தேவையானவை:-
கடலை மாவு – 2 கப்
அவித்த உருளைக்கிழங்கு – 4.
உப்பு – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
கடலை மாவில் உப்பு மஞ்சள் பொடி,பெருங்காயப்பொடி, கரம் மசாலா போட்டு உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு தேவையானால் சிறிது நீர் தெளித்து மென்மையாகப் பிசைந்து  20 நிமிடம் ஊறவிடவும்.

கையில் எண்ணெய் தொட்டு மாவை உருட்டி ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயைக் காயவைத்துப் பிழிந்தெடுக்கவும். சுவையான ஆலு புஜியா தயார்.

7.முறுக்கு வடை .

தேவையானவை :-
பச்சரிசி - 4 கப்
வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 1/2 கப்
உப்பு - 1 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும்.

வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும்இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.

ஒரு கையளவு மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்கு செய்யவும்.

எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

8.ராகி தட்டை:-

தேவையானவை:-
கேழ்வரகு மாவு – 2 கப்
அரிசி மாவு – ½ கப்
வறுத்தரைத்த உளுந்து மாவு – ½ கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நெய்/வெண்ணெய் – 2 டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்.
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
கேழ்வரகு மாவில் அரிசிமாவு, உளுந்து மாவு, எள், சீரகம் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்றி ஊறவைத்த கடலைப் பருப்பைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.

காய்ச்சிய எண்ணெய் சிறிது ஊற்றி மென்மையாகப் பிசைந்து சப்பாத்திக்கட்டையில் தேய்த்து அல்லது வட்டமாகக் கையால் மெலிதாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொறித்தெடுக்கவும்.


9.சங்கரபாலி.
தேவையானவை :-
மைதா – 2 கப்
ரவா – 1 கப்
பால் -1/2 கப்
டால்டா/நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் – 2 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ¼ டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
மைதா, ரவா, ஓமம், உப்பு, மிளகாய்த்தூளைக் கலக்கவும். டால்டா அல்லது நெய்யை உருக்கி ஊற்றி பால் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் நன்கு பிசையவும். 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

கனமான சப்பாத்தியைப் போலத் தேய்த்து டைமன் ஷேப்பில் துண்டுகள் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

10. மக்கி கா சிவ்டா:-
தேவையானவை:-
கார்ன் சிப்ஸ்– ½ கப்
அவல் – ½ கப்
ஓமப்பொடி – ½ கப்
வறுத்த பாசிப்பருப்பு – ½ கப்
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 20.
பாதாம் – 10
பிஸ்தா – 10
பரங்கிக்காய் விதை – 1 டேபிள் ஸ்பூன்
சாரைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2 மெல்லிய வளையமாக நறுக்கவும்.
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்துமல்லி – 1 கைப்பிடி
கிஸ்மிஸ் – 1 டேபிள் ஸ்பூன்
பேரீச்சை – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கவும்.
உப்பு – ½ டீஸ்பூன்
பனங்கற்கண்டு பொடித்தது – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
எண்ணெயைக் காயவைத்து வலை போட்ட கரண்டியில் போட்டு வேர்க்கடலையைப் பொன்னிறமாக வறுக்கவும். இதேபோல் நிதானமான தீயில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு, எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.

அதே எண்ணெயில் பச்சைமிளகாயை க்ரிஸ்பாக வறுக்கவும். கருவேப்பிலை, கொத்துமல்லி, எல்லாவற்றையும் மொறுமொறுப்பாக வறுத்து இன்னொரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.

அவலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரிந்ததும் எடுக்கவும். இதில் கார்ன் சிப்ஸ், ஓமப்பொடி , வறுத்த பாசிப்பருப்பு, வேர்க்கடலை , முந்திரி, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு, பச்சைமிளகாய் கருவேப்பிலை கொத்துமல்லி, கிஸ்மிஸ், பேரீச்சை ஆகியவற்றோடு கலக்கவும். உப்பையும், பனங்கற்கண்டுப் பொடியையும் தூவி நன்கு குலுக்கி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...